ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா


ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 20 Jan 2022 7:02 PM GMT (Updated: 20 Jan 2022 7:02 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தினசரி அதிகரித்து வருகிறது நேற்று 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

சிவகங்கை, 

சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று தினசரி அதிகரித்து வருகிறது நேற்று 138 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

கொரோனா அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி 9 பேருக்கு கொரோனா பரவல் இருந்தது. இந்த நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்தது.
கடந்த 16-ந்தேதி அன்று 110 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தின் பல இடங்களில் தொற்று பரவல் இருந்தாலும் காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை பகுதிகளில் தொற்று பரவல் அதிக அளவில் உள்ளது.
 இந்த நோய் தொற்றால் மருத்துவ கல்லூரி மருத்துவமனை பணியாளர், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர், போலீசார் மற்றும் காரைக்குடியில் உள்ள தொழில் பாதுகாப்பு படை போலீசார் உள்பட பல்வேறு தரப்பினரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விழிப்புணர்வு

தற்போது தினசரி நோய் தொற்று நோய் பரவல் அதிகரித்து வருவதனால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தொற்று பரவலை கட்டுபடுத்த தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி உத்தரவின்பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் சிறப்பு தூய்மை இயக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அனைத்து ஊராட்சிகளிலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் போன்றவற்றை சுத்தம் செய்து பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக்கொள்வது ஊரகப் பகுதிகளில் நோய் தொற்று குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

138 பேருக்கு கொரோனா

மேலும் நகர்ப்பகுதிகளில் பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அத்தியாவசிய பணிகள் இருந்தால் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து சென்றுவர வேண்டும் என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் தெரிவித்து வருகின்றனர். முகக் கவசம் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
 சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 110 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டது. நேற்று 138 பேருக்கு ெகாரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 653 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூரண குணமடைந்த 80 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்கள்.

Next Story