3 வயது குழந்தையை மதுகுடிக்க வைத்து சித்ரவதை


3 வயது குழந்தையை மதுகுடிக்க வைத்து சித்ரவதை
x
தினத்தந்தி 20 Jan 2022 8:48 PM GMT (Updated: 20 Jan 2022 8:48 PM GMT)

மகனை மது குடிக்க வைத்து கொடுமைப்படுத்திய நபர் மீது போலீசில் மனைவி புகார் அளித்தார்.

பெங்களூரு: பெங்களூரு பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் 26 வயது பெண் ஒருவர் தனது கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது பரபரப்பு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனது கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். எனக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளான். எனது கணவருக்கும், எனது சகோதரரின் மனைவிக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வருகிறது. இது எனக்கு தெரியவந்ததும், எனது கணவருடன் நான் சண்டை போட்டேன். அப்போது எனது மாமியார், எனது கணவருக்கு ஆதரவாக பேசினார். மேலும் உனது சகோதரனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது என்றும், இதனால் உன் சகோதரனின் மனைவி குழந்தை பெற்றுக்கொள்ள எனது மகன் உதவி செய்கிறான் என்றும் மாமியார் கூறினார். மேலும் வரதட்சணை வாங்கி வரும்படியும்  எனக்கு தொல்லை கொடுத்தனர். 

எனது 3 வயது மகனுக்கு எனது கணவர், மாமியார் ஆகியோர் சேர்ந்து பாலுக்கு பதிலாக பால் பாட்டிலில் மதுபானத்தை ஊற்றி வலுக்கட்டாயமாக குடிக்க வைத்து சித்ரவதை செய்கின்றனர். இதனை தடுத்த என்னையும் அடித்து, உதைக்கின்றனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். அந்த புகாரின்பேரில் பெண்ணின் கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது பசவேஸ்வரா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Next Story