சேலத்தில், கே.பி.அன்பழகனின் நண்பரான கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை


சேலத்தில், கே.பி.அன்பழகனின் நண்பரான கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
x
தினத்தந்தி 20 Jan 2022 11:11 PM GMT (Updated: 20 Jan 2022 11:11 PM GMT)

சேலத்தில் கே.பி.அன்பழகனின் நண்பரான கரூர் கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.

சேலம்:
சேலத்தில் கே.பி.அன்பழகனின் நண்பரான கரூர் கனிமவளத்துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.
சோதனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு சொந்தமான வீடு உள்பட பல்வேறு இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். மேலும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
சேலம் இரும்பாலை ராசிநகரில் கே.பி.அன்பழகனின் நண்பர் ஜெயபால் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. தற்போது ஜெயபால் கரூர் மாவட்ட கனிமவளத்துறை துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவரது வீட்டிலும் நேற்று அதிகாலை முதல் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். 
முக்கிய ஆவணங்கள்
அப்போது, வீட்டில் ஜெயபால் இல்லை. இதனால் அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். வெளியில் இருந்து யாரையும் வீட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து வீட்டின் கதவுகள் மூடப்பட்டு ஒவ்வொரு அறைகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை செய்தனர். 
இந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கே.பி.அன்பழகன் அமைச்சராக இருந்தபோது ஜெயபால் தர்மபுரி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
சேலத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் நண்பரான அரசு உயர்அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story