நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க எதிர்ப்பு


நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க எதிர்ப்பு
x
தினத்தந்தி 21 Jan 2022 12:28 PM GMT (Updated: 21 Jan 2022 12:28 PM GMT)

திருப்பூர் புது ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருப்பூர்
திருப்பூர் புது ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா சிறப்பு வார்டு அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஆரம்ப சுகாதார நிலையம்
திருப்பூர் புதுராம கிருஷ்ணாபுரத்தில் எல்.ஆர்.ஜி. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு 22, 23, 24, 33, 34 ஆகிய 5 வார்டுகளை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தரம் உயர்த்தப்பட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக உள்ளது. இங்கு கர்ப்பிணிகள் மற்றும் புறநோயாளிகள் என தினமும் 200-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றும் பணி நடைபெற்றதாக தெரிகிறது. புற நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் அதிகம் வந்து செல்லும் பகுதியாக இருப்பதாலும், ரேஷன் கடை இருப்பதாலும், குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் உள்ள  ஆரம்ப சுகாதார நிலையத்தை கொரோனா வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்
அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர்கள் முருகசாமி, கலைமகள் கோபால்சாமி, கோல்டன் நகர் பகுதி செயலாளர் ஹரிஹரசுதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியில் 5 வார்டு மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்  ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வார்டு அமைத்தால் சிறப்பாக இருக்காது. இதனால் வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். 


Next Story