திருப்பத்தூர் அருகே 1,000 ஆண்டுகள் பழமையான சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கண்டுபிடிப்பு


திருப்பத்தூர் அருகே 1,000 ஆண்டுகள் பழமையான சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 21 Jan 2022 6:21 PM GMT (Updated: 21 Jan 2022 6:21 PM GMT)

திருப்பத்தூர் அருகே சாலை விரிவாக்க பணிக்கு பள்ளம் தோண்டியபோது சண்டிகேசுவரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே சாலை விரிவாக்க பணிக்கு பள்ளம் தோண்டியபோது சண்டிகேசுவரர் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

2 சிற்பங்கள்

திருப்பத்தூர் அருகே குரிசிலாப்பட்டு ஊராட்சியில் சாலை விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டிய போது மண்ணில் புதைந்திருந்த 2 சிற்பங்கள் கிடைத்தது. இது குறித்து ஊராட்சி மன்ற உறுப்பினர் சண்முகம் அளித்த தகவலின் பேரில் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஆ.பிரபு மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து ஆ.பிரபு கூறுகையில் குரிசிலாப்பட்டு பகுதியில் கிடைத்த 2 சிற்பங்களில் நடுகல் ஒன்றும், பழமையான சண்டிகேசுவரர் சிற்பமும் என்பதை உறுதி செய்தோம். இப்பகுதியில் சோழர்கால சண்டிகேசுவரர் சிற்பம் கிடைத்திருப்பது சிறப்புக்குரியதாகும்.

சண்டிகேசுவரர்

விசாரசருமன் என்ற இயற்பெயரைக் கொண்ட சண்டிகேசுவரர் சிவபெருமானிடம் மிகுந்த பக்தி கொண்டவராவார். ஒரு முறை இடையர் குலச் சிறுவன் ஒருவன் தனது பசுக்களை அடிப்பதைக் கண்டு, கோபம் கொண்ட விசாரசர்மன் தானே பசுக்களை மேய்க்கத் தொடங்கினார். பசுக்களிடம் பாலைக் கரந்து அதனை சிவபூஜைக்கு பயன்படுத்தினார். இதனால் பசுவின் உரிமையாளர்கள், விசாரசருமரின் தந்தையிடம் சென்று முறையிட்டார்கள்.

 விசாரசருமன், மண்ணால் லிங்கத்தினை செய்து, பசுவின் பாலால் அபிஷேகம் செய்தார். அதனை நேரில் கண்ட தந்தை மண்ணில் பாலை ஊற்றி வீணாக்குகின்றானே என்று நினைத்து பூஜையை தடுக்க சென்றார். விசாரசருமர் தவத்தில் இருந்தபோது சிவபெருமானிடத்தில் தன்னை மறந்திருந்தமையால், தந்தையின் வருகையை அறியவில்லை. இதனால் கோபம்கொண்டு, சிவ அபிசேகத்திற்கு வைத்திருந்த பாலினை அவரது தந்தை தட்டிவிட்டார். தன் தந்தையைத் தண்டிக்கும் பொருட்டு அருகிலிருந்த குச்சியை எடுத்து விசாரசருமன் வீச, அது பக்தியால் மழுவாக மாறி அவர் தந்தையின் கால்களை வெட்டியது.

 விசாரசருமர் தனது பூசையை தொடர்ந்தார். இதனைக் கண்ட சிவபெருமான், அவர் முன் தோன்றி தனக்கு சமர்ப்பிக்கும் அனைத்திற்கும் உரியவனாகும் (தனாதிபதி) சண்டேசுவர பதவியை அளித்தார்.
அதன் பின் விசாரசருமன் சண்டேசுவர நாயனார் என்று 63 நாயன்மார்களுள் ஒருவராக அழைக்கப்படுகிறார். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சிற்பம் 2 அடி உயரமும் 1 அடி  அகலமும் கொண்டதாகும். சோழர்காலத்தை சேர்ந்ததாகக் கருதப்படும் இச்சிற்பம் கி.பி. 10-ம்் நூற்றாண்டை சேர்ந்ததாகும். 1,000 ஆண்டுகளை கடந்ததால் தேய்மானமும், உராய்வும் ஏற்பட்டுக் காணப்படுகிறது.

வில்வீரனின் நடுகல்

மேலும் இங்கு கிடைக்கப்பெற்ற நடுகல்லானது கீழ்ப்பகுதி உடைந்தநிலையில் கிடைத்துள்ளது. அது 5 அடி அடிநீளமும், 3 அடி அகலமும் கொண்ட நடுகல்லாகும். இதில் வீரன் தன் வலது கையில் வில்லும், இடது கையில் அம்பும் ஏந்திய நிலையில் உள்ளார். தலையில் உச்சியில் வாரி முடித்துக் கட்டிக் கொண்டையிட்ட நிலையில் உள்ளார். இவர் வில் வீரனாகத் திகழ்ந்திருக்க வேண்டும். இப்பகுதியில் போரிட்டு இறந்தவராக இருக்கக்கூடும். அவரது வீரத்தினைப் பறைசாற்றும் விதமாக நடுகல் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். நடுகல் வழிபாட்டில் இருந்து பின்னர் கைவிடப்பட்டு மண்ணில் புதையுண்டு போனதாகும். இது கி.பி. 15-ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கக்கூடும்.

இந்த 2 சிற்பங்களும் இங்குள்ள திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம் இச்சிற்பங்களை உரிய முறையில் பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Next Story