தர்மபுரியில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது


தர்மபுரியில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 22 Jan 2022 7:36 AM GMT (Updated: 22 Jan 2022 7:36 AM GMT)

தர்மபுரியில் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி பகுதியில் வங்கதேசத்தை சேர்ந்த சிலர் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சோகத்தூர் கூட்ரோடு அருகே தங்கி இருந்த வங்கதேசம் குள்னா பகுதியை சேர்ந்த 8 பேரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட எந்தவித ஆவணங்கள் இன்றி குடிசை அமைத்து குழந்தைகளுடன் தங்கி பழைய பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து பிழைப்பு நடத்தி வந்ததும் தெரிந்தது. இதுகுறித்து பாப்பிநாயக்கனஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் ராஜ்குமார் தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த தர்மபுரி டவுன் போலீசார் சட்டவிரோதமாக தங்கியிருந்த சதியா பேகம், ஹாசிப், பர்வேஸ் ஹவுதலார், மரியம் அத்தர் துல்லா, முகம்மது ரபிக் துலக்ட்டர், முகமது மமுன்துலக்ட்டர், முகமது ராஜி பையா, முகமது ராஜி ஹவிதார் ஆகிய 8 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story