புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Jan 2022 9:25 PM GMT (Updated: 22 Jan 2022 9:25 PM GMT)

புகார் பெட்டியில் தஞ்சை மக்கள் அளித்துள்ள கோரிக்கைகள் குறித்த விவரம் வருமாறு

மின் விளக்குகள் ஒளிருமா
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்தநிலையில் ஆஸ்பத்திரியின் புதிய நுழைவு வாயில் பகுதியில் மின் விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்தப் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக இரவு நேரங்களில் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், இருள் சூழ்ந்து கிடப்பதால் சிகிச்சைக்கு வரும் பெண்கள் மற்றும் குழந்தைகள் அந்தப் பகுதியை அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரி புதிய நுழைவாயில் பகுதியில் உள்ள மின் விளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா
பொதுமக்கள் பட்டுக்கோட்டை.

குடிநீர் வசதி வேண்டும்
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் கோவிந்தபுரம் விட்டல் பாண்டு ரங்கன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் குடிநீர் வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குடிநீரின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் வெளி மாவட்டங்களில் இருந்து இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் வருபவர்கள் குடிநீர் வசதி இல்லாததால் அவதிக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் குடிநீர் வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுப்பார்களா
-சுந்தர்ராஜ், திருவிடைமருதூர்.

Next Story