உரங்களின் மீதான சரக்கு-சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும்; விவசாயிகள் சங்க மாநில தலைவர் மத்திய நிதி மந்திரிக்கு மனு


உரங்களின் மீதான சரக்கு-சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும்; விவசாயிகள் சங்க மாநில தலைவர் மத்திய நிதி மந்திரிக்கு மனு
x
தினத்தந்தி 23 Jan 2022 9:35 PM GMT (Updated: 23 Jan 2022 9:35 PM GMT)

உரங்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

ஈரோடு
உரங்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும் என்று தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
சரக்கு மற்றும் சேவை வரி
தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் கே.ஆர்.சுதந்திரராசு, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 4 மாதங்களில் பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்கள் 70 முதல், 80 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகளுக்கு கூடுதல் உற்பத்தி செலவாகிறது. மேலும் பெரும் கடன் சுமை ஏற்படுகிறது. எனவே மத்திய பட்ஜெட்டில் உர விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை முற்றிலும் நீக்க வேண்டும்.
தென்னை மற்றும் எண்ணெய் வித்து பயிர் செய்யும் விவசாயிகள் நலன் கருதி, இறக்குமதி செய்யப்படும் பாமாயில், கடுகு மற்றும் சூரியகாந்தி எண்ணெய் மீது அதிக அளவில் இறக்குமதி வரி விதிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் மீது மத்திய அரசு விதிக்கும் வரியை குறைக்க வேண்டும்.
மானிய விலையில் டீசல்
மரவள்ளி கிழங்கில் இருந்து தயாரிக்கப்படும் ஸ்டார்ச் மாவுக்கு, 12 சதவீத வரியை, 5 சதவீதமாக குறைக்க வேண்டும். மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை ஆண்டுக்கு ரூ.6 ஆயிரத்தில் இருந்து, ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.
விவசாயத்துக்கு 33 காசு என்ற மானிய வட்டியில் வழங்கப்படும் ரூ.3 லட்சம் கடனை, ரூ.6 லட்சமாக உயர்த்த வேண்டும்.
சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 1,000 லிட்டர் டீசல், 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும். தமிழகத்தில் அதிகமாக சாகுபடியாகும் மஞ்சள், மரவள்ளி கிழங்குக்கு என தனியாக ஈரோடு மற்றும் நாமக்கல்லில் வாரியம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.

Next Story