ஈரோட்டில் வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.6½ கோடி மோசடி செய்ய முயற்சி- காவலாளி கைது


ஈரோட்டில் வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.6½ கோடி மோசடி செய்ய முயற்சி- காவலாளி கைது
x
தினத்தந்தி 25 Jan 2022 9:14 PM GMT (Updated: 25 Jan 2022 9:14 PM GMT)

ஈரோட்டில் வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.6½ கோடி மோசடி செய்ய முயன்ற காவலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு
ஈரோட்டில் வங்கியில் போலி காசோலை கொடுத்து ரூ.6½ கோடி மோசடி செய்ய முயன்ற காவலாளியை போலீசார் கைது செய்தனர்.
காவலாளி
ஈரோடு ரங்கம்பாளையம் ஜீவா நகரை சேர்ந்தவர் சதீஷ் (வயது 46). தனியார் வங்கியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி சதீஷ் அந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று உள்ளார். அங்கு வங்கி ஊழியரிடம் அவர் ஒரு காசோலையை கொடுத்து அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டு உள்ள பணத்தை தனது வங்கி கணக்கில் வரவு வைக்கும்படி கூறி உள்ளார்.
ரூ.6½ கோடி
அந்த காசோலையை வாங்கி வங்கி ஊழியர் சரிபார்த்தார். அப்போது அதில் ரூ.6 கோடியே 60 லட்சம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதிக தொகை என்பதால் சதீசின் வங்கி கணக்கில் வரவு, செலவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அவரது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் வரவு, செலவு இருந்தது தெரியவந்தது. இதனால் வங்கி அதிகாரிகளுக்கு சதீசின் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த காசோலையில் குறிப்பிடப்பட்டு உள்ள மராட்டிய மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு வங்கி அதிகாரிகள் பேசினர்.
அப்போது சதீஸ் என்ற பெயரில் இதுவரை காசோலை எதுவும் வழங்கப்படவில்லை என்றும், அந்த காசோலைக்கும், தங்களது நிறுவனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
கைது
இதுகுறித்து வங்கியின் உதவி மேலாளர் ரிஷிகுமார் ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் போலி காசோலை கொடுத்து வங்கியில் சதீஷ் பண மோசடி செய்ய முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சதீசை நேற்று போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story