மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்


மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்
x
தினத்தந்தி 27 Jan 2022 5:29 PM GMT (Updated: 27 Jan 2022 5:29 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தல்

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந் தேதியும், 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் நாைள (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

 அடுத்த மாதம் 4-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு பரிசீலனை 5-ந் தேதியும், வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாள் 7-ந் தேதி என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.'

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சியில் 60 கவுன்சிலர்கள், குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகளில் 57 கவுன்சிலர்கள், பென்னாத்தூர், திருவலம், ஒடுகத்தூர், பள்ளிகொண்டா ஆகிய பேரூராட்சிகளில் 63 கவுன்சிலர்கள் என்று மொத்தம் 180 வார்டு கவுன்சிலர்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

உள்ளாட்சி தேர்தல் தேதி  அறிவித்தவுடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுஇடங்களில் அரசியல் கட்சியின் கொடி, அரசியல் கட்சி பிரமுகர்களின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர், பேனர்கள் உள்ளிட்டவற்றை உடனடியாக அகற்றும்படி உத்தரவிடப்பட்டது. 

இங்குள்ள அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும் தற்போதைய மற்றும் முன்னாள் முதல்-அமைச்சரின் புகைப்படம் அகற்றப்படும். மேலும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாது. அதேபோன்று புதியரேஷன் கார்டு விண்ணப்பம், முதியோர், விதவைகள் உதவித்தொகை விண்ணப்பம், சமூக நலத்திட்ட உதவிகள் கோருவது உள்ளிட்ட அனைத்து பொதுசேவைகளும் தேர்தலுக்கு பின்னரே செயல்படுத்தப்படும்.

மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக எடுத்து சென்றால் அதற்கு உரிய ஆவணங்களை காண்பிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவினர் முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள். 

வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தாது என்று தேர்தல்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு சீல்

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து இன்று வேலூர் அண்ணாசாலையில் உள்ள வேலூர் எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயன் அலுவலகத்தை பொதுப்பணித்துறையினர் பூட்டி சீல் வைத்தனர்.

 அதேபோன்று வேலூர் மாநகராட்சி பகுதியில் காணப்பட்ட அரசியல் கட்சியின் கொடி, அரசியல் கட்சி பிரமுகர்களின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் மற்றும் பேனர் உள்ளிட்டவற்றை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


Next Story