கெலமங்கலம் அருகே சாலையில் நின்ற காட்டு யானை-வாகன ஓட்டிகள் அச்சம்
கெலமங்கலம் அருகே சாலையில் நின்ற காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.
ராயக்கோட்டை:
சாலையில் நின்ற காட்டு யானை
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் சுற்று வட்டார வனப்பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. அவை அடிக்கடி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து, பயிர்களை நாசம் செய்வது தொடர்ந்து வருகிறது.
இந்தநிலையில் கெலமங்கலம் அருகே உள்ள ஜெக்கேரி வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியாக சுற்றி திரிகிறது. அந்த யானை நேற்று காலை ஜெக்கேரி அருகே கெலமங்கலம்-ராயக்கோட்டை சாலையை கடந்தது. அப்போது திடீரென யானை சாலையில் நின்றது.
வாகன ஓட்டிகள் அச்சம்
இதனை பார்த்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். அவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லாமல் மாற்று பாதையில் சுற்றியவாறு சென்றனர்.
இதனிடையே நீண்ட நேரத்திற்கு பிறகு அந்த காட்டு யானை சாலையை கடந்து வனப்பகுதிக்குள் சென்றது. கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து வந்த இந்த யானையை, கூட்டத்துடன் சேர்த்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Related Tags :
Next Story