சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு


சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 30 Jan 2022 1:09 PM GMT (Updated: 30 Jan 2022 1:09 PM GMT)

சிவன் கோவிலில் சிறப்பு வழிபாடு

கோத்தகிரி

கோத்தகிரி சக்திமலை முருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவன் கோவிலில் தை மாத சனி பிரதோஷம் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் சிவன் கோவில்களில் சனிப்பிரதோஷ நாட்களில் யாக பூஜை, அபிஷேக பூஜையுடன் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்படி தை மாத சனி பிரதோஷ நாளில் கோத்தகிரி சக்திமலையில் உள்ள சிவன்  கோவிலில் காலை 10 மணிக்கு யாக பூஜை நடைபெற்றது. மாலை 3 மணிக்கு சிவனுக்கு பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.

தொடர்ந்து அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் சிவபெருமானின் வாகனமான நந்தி தேவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அருகம்புல் சாற்றி மலர்களால் அலங்கரித்து அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து கலந்துகொண்டனர்.


Next Story