தை அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு திதி


தை அமாவாசையையொட்டி   பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு திதி
x
தினத்தந்தி 31 Jan 2022 5:29 PM GMT (Updated: 31 Jan 2022 5:29 PM GMT)

தை அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனிதநீராடினர். முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.

தை அமாவாசையையொட்டி பவானி கூடுதுறையில் பக்தர்கள் புனிதநீராடினர். முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர்.
பவானி கூடுதுறை
ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பவானி மற்றும் காவிரி ஆற்றுடன் கண்ணுக்கு புலப்படாத  அமுத நதியும் கூடுவதாக ஐதீகம். 
இதனால் கூடுதுறையில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து சங்கமேஸ்வரரை வழிபட்டால், அவர்களுடைய ஆசி தங்களுடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 
2 ஆண்டுகளாக...
இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் இங்கு வந்து புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். 
கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதால் பவானி கூடுதுறையில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. 
திதி- தர்ப்பணம்
இந்த நிலையில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளுடன் வழிபாட்டு தலங்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. 
இதைத்தொடர்ந்து தை அமாவாசையான நேற்று பவானி கூடுதுறைக்கு ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். 
 பக்தர்கள் வருகை குறைந்தது
வழக்கமாக தை அமாவாசை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள், பவானி கூடுதுறைக்கு வந்து திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். ஆனால் நேற்று பவானி கூடுதுறைக்கு பக்தர்கள் வருகை குறைவாக இருந்தது. இதன்காரணமாக பவானி கூடுதுறை களையிழந்து காணப்பட்டது. 
இதையொட்டி வழக்கம்போல் நேற்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சங்கமேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது.  இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

Next Story