அ.தி.மு.க. சுவரொட்டிகளால் பரபரப்பு


அ.தி.மு.க. சுவரொட்டிகளால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 March 2022 7:59 PM GMT (Updated: 6 March 2022 7:59 PM GMT)

லாலாபேட்டை பகுதிகளில் ஒட்டப்பட்ட அ.தி.மு.க. சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணராயபுரம், 
தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு நடைபெற்ற நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் அ.தி.மு.க. தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் கட்சி தொண்டர்கள் சோர்வு அடைந்து உள்ளனர். மேலும், அ.தி.மு.க.வை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வர வேண்டுமென கட்சி தொண்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், குளித்தலை தொகுதி லாலாபேட்டை பகுதியில் அ.தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஜெயலலிதா படத்துடன் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டு உள்ளது. அதில், கடந்த சட்டசபை தேர்தலில் குளித்தலை தொகுதியில் கூடவே இருந்து குழி பறித்த துரோகிகளை களை எடுங்கள். கலை இழந்த கழகத்தை காப்பாற்ற என கூறப்பட்டு உள்ளது. மேலும், இந்த சுவரொட்டி லாலாபேட்டை பஸ்நிலையம், குகை வழிப்பாதை, கடைவீதி, பிள்ளைப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Next Story