ஆன்லைனில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி என்ஜினீயரிடம் பணம் மோசடி


ஆன்லைனில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி என்ஜினீயரிடம் பணம் மோசடி
x
தினத்தந்தி 27 March 2022 6:55 PM GMT (Updated: 27 March 2022 6:55 PM GMT)

ஆன்லைனில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி என்ஜினீயரிடம் பணம் ேமாசடி நடைபெற்று உள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

ராமநாதபுரம், 

ஆன்லைனில் பகுதி நேர வேலை வழங்குவதாக கூறி என்ஜினீயரிடம் பணம் ேமாசடி நடைபெற்று உள்ளது. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

என்ஜினீயர்

பரமக்குடி ஆரம்பகோட்டை வடக்குத்தெருவை சேர்ந்தவர் புயல்ராஜ். இவருடைய மகன் சிவக்குமார் (வயது25).இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில் என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் ஓமனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். விடுமுறையில் தாயை பார்க்க வந்துள்ளார். 
இந்நிலையில் அவரது நண்பர் முரளிதரன் என்பவருக்கு ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை பார்ப்பதன் மூலம் ரூ.500 முதல் 20 ஆயிரம் வரை அதிகளவில் சம்பாதிக்கலாம் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது. அதனை கண்ட முரளிதரன் தனது நண்பரான சிவக்குமாருக்கு அனுப்பி உள்ளார். வெளிநாடு செல்லலாமா? இங்கேயே வேலை பார்க்கலாமா? என்று யோசித்துக்கொண்டிருந்த சிவக்குமார் அந்த தகவலை பார்த்ததும் முயற்சி செய்து பார்க்கலாம் என்று எண்ணினார். இதன்படி அந்த தகவலில் இருந்த லிங்க்கில் சென்றபோது தங்களின் பணியை மேற்கொள்ள தேவையான விவரங்களை பெற்றுக்கொண்டதுடன் குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால்தான் பணி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
 இதன்படி கூகுள்பே மூலம் பணம் செலுத்திய நிலையில் அவர்கள் அளித்த பணியை செய்து கொடுத்துள்ளார். இதற்காக அவர்கள் பணம் வழங்கியதை கண்ட சிவக்குமார் ஆன்லைன் மூலம் நன்றாக சம்பாதிக்கலாம் என நினைத்து கொண்டு அடுத்தடுத்த பணிகளை பணம் கட்டி மேற்கொண்டுள்ளார்.

ரூ.89 ஆயிரம் ேமாசடி

அதற்கு அவ்வப்போது அவரது கணக்கில் பணம் வந்த நிலையில் அந்த பணியையே தொடர்ந்து செய்து பணம் சம்பாதித்து விடலாம் என்று கருதி பணத்தினை செலுத்தி உள்ளார். ஆனால் சில நாட்களில் அவரது பணிக்கான எந்த பணமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்து விசாரித்தபோது சம்பந்தப்பட்ட மோசடி நபர்கள் எந்த பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். சந்தேகம் அடைந்த சிவக்குமார் இணையதளத்தில் தேடிப்பார்த்தபோது அந்த நிறுவனம் அனைத்தும் போலி என்பதும் அவர்களே இதுபோன்று பணியை கொடுத்து அதற்கான பணத்தினை கொடுத்து ஆசை காட்டி ஒருகட்டத்தில் அதிகளவில் பணத்தை சுருட்டிக்கொண்டு மாயமாகிவிடுவார்கள் என்று தெரிந்தது. இதனால் தான் இதுவரை ரூ.89 ஆயிரத்து 100 ஏமாந்துள்ளதை உணர்ந்த சிவக்குமார் இதுகுறித்து சைபர்கிரைம் பிரிவில் ஆன்லைனில் புகார் செய்தார்.
 அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட சைபர்கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் வழக்குபதிவு செய்து ஆன்லைன் மோசடி கும்பலை தேடிவருகின்றார்.

Next Story