விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 11 April 2022 5:27 PM GMT (Updated: 11 April 2022 5:27 PM GMT)

விபத்து வழக்கில் நஷ்ட ஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.


விழுப்புரம், 

விழுப்புரம் அருகே உள்ள அரியலூர்திருக்கை கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (வயது 50), விவசாயி. இவர் கடந்த 18.12.2017 அன்று கெடார் பஸ் நிறுத்தம் அருகில் சாலையை கடந்து செல்ல முயன்றார். 

அப்போது திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் நோக்கிச்சென்ற விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான பஸ் மோதியதில் கலியமூர்த்தி பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.இதுகுறித்து கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த விபத்து தொடர்பாக நஷ்ட ஈடு கேட்டு கலியமூர்த்தியின் மனைவி வளர்மதி, கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் விழுப்புரம் மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், பாதிக்கப்பட்ட கலியமூர்த்தியின் குடும்பத்திற்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈடாக ரூ.8 லட்சத்து 13 ஆயிரத்து 700-ஐ வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.


ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈட்டு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தியதால் மனுதாரர் வளர்மதி சார்பில் வக்கீல் பன்னீர்செல்வம், 23.12.2021 அன்று நிறைவேற்று மனுதாக்கல் செய்தார். 

இம்மனுவை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், பாதிக்கப்பட்ட கலியமூர்த்தியின் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ.10 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என்று உத்தரவிட்டார்.


இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பிறகும் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈட்டு தொகையை வழங்காததால் நேற்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல்ல இருந்த அரசு பஸ்சை நீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் ராஜூ ஜப்தி செய்தார். 

அப்போது வக்கீல் பன்னீர்செல்வம், மனுதாரர் வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர். அதன் பிறகு அந்த பஸ், கோர்ட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

Next Story