கடலில் மிதந்து வந்த கஞ்சா பார்சல்கள்


கடலில் மிதந்து வந்த கஞ்சா பார்சல்கள்
x
தினத்தந்தி 17 April 2022 5:08 PM GMT (Updated: 17 April 2022 5:08 PM GMT)

கடலில் மிதந்து வந்த 190 கிலோ கஞ்சா பார்சல்களை கைப்பற்றி இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேசுவரம், 
கடலில் மிதந்து வந்த 190 கிலோ கஞ்சா பார்சல்களை கைப்பற்றி  இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடத்தல்
ராமேசுவரம் அருகே உள்ளது இலங்கை பகுதி. அதுபோல் ராமேசுவரம், தனுஷ்கோடி உள்ளிட்ட தமிழக கடல் பகுதி வழியாக இலங்கைக்கு கடல் அட்டை, கஞ்சா, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் கடத்தல் கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் இலங்கை மன்னார் தெற்கு கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் கடலில் மிதந்து வந்த பார்சல்களை கைப்பற்றி சோதனை செய்தனர். அப்போது சுமார் 50 பார்சலில் இருந்த 190 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் இருந்து கடத்தல்காரர்கள் மூலம் வாங்கி இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட இந்த கஞ்சா பார்சல்களை இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பலை கண்டதும் கடத்தல்காரர்கள் கடலில் வீசிவிட்டு தப்பி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
விசாரணை
இதுகுறித்து இலங்கை கடற்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள இந்த கஞ்சா பார்சல்கள் தமிழக கடற்பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்டதா அல்லது கேரளாவில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்பது குறித்தும் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடந்த சில நாட்களாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையிலும் ராமேசுவரம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் மற்றும் கடற்கரை பகுதிகளில் கடலோர காவல் படை மற்றும் கடலோர போலீசார் மூலமோ இதுவரையிலும் கடத்தல் காரர்களுடன் எந்த ஒரு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பிடிபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story