புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்


புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை-சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார்
x
தினத்தந்தி 21 April 2022 6:26 PM GMT (Updated: 21 April 2022 6:26 PM GMT)

ஜெயங்கொண்டம் அருகே புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்து உள்ளனர்.

ஜெயங்கொண்டம், 
விவசாயி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரகாசன். இவருடைய மகன் சேகர் (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு தற்போது விவசாயம் செய்து வருகிறார்.
இவருக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள வீரபோகம் வடக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் மகள் ஜெயந்திக்கும் (20) கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இவர்கள் செங்குந்தபுரம் கிராமத்தில் பள்ளிக்கூட தெருவில் வசித்து வந்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று வழக்கம்போல் விவசாயம் செய்வதற்காக சேகர் சென்றுவிட்டு பின்னர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஜெயந்தி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்தசம்பவம் குறித்து தகவல் அறிந்த ஜெயந்தியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில்  புகார் அளித்தனர். 
இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் இறந்த ஜெயந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Next Story