25 சதவீத இ்டஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


25 சதவீத இ்டஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 25 April 2022 6:52 PM GMT (Updated: 25 April 2022 6:52 PM GMT)

தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

தனியார் மற்றும் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

25 சதவீத இடஒதுக்கீடு

சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மணிவண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 2022-2023-ம் கல்வியாண்டில் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் 150 பள்ளிகளில் 1,844 இடங்களுக்கு இணையதள வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளிகளின் நுழைவுநிலை (எல்.கே.ஜி) வகுப்பில் மாணவ மாணவியர் சேர்க்கை மேற்கொள்ளலாம். rte.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் பள்ளிகள் வாரியாக இட ஒதுக்கீடு விவரம் உள்ளது. இணையதளம் மூலம் அடுத்த மாதம் 18-ந்தேதி வரை சிவகங்கை, தேவகோட்டை மற்றும் திருப்பத்தூரில் உள்ள வட்டாரக்கல்வி அலுவலகங்கள், வட்டாரவள மையங்கள் தமிழக அரசின் இ-சேவை மையங்கள் மற்றும் அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள்

விண்ணப்பிக்கும் போது சமீபத்தில் எடுக்கப்பட்ட குழந்தையின் புகைப்படம், குழந்தையின் சாதி சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், குடியிருப்புக்கான ஆவணம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பதாரரின் குடியிருப்புக்கும் பள்ளிக்கும் இடையே உள்ள தூரம் ஒரு கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு கீழ் இருக்க வேண்டும்.
ஆதரவற்றோர், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர்கள், துய்மைபணி தொழிலாளியின் குழந்தை, மாற்றுத்திறனாளி குழந்தை, உரிய சான்றிதழுடன் விண்ணப்பிக்க வேண்டும். இவர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவின் கீழ் முன்னுரிமை கோரும் பிரிவினர்கள் ஆவார்கள். விண்ணப்பிக்கும் போது தந்தை அல்லது தாயின் அலைபேசி எண் குறிப்பிட வேண்டும். விண்ணப்பித்தவர்களுக்கு குலுக்கல் மூலம் தேர்வு வருகிற மே 23-ந்தேதி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story