பெங்களூருவில் உழைப்பாளர் தினத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


பெங்களூருவில் உழைப்பாளர் தினத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி மறுப்பு; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 April 2022 10:15 PM GMT (Updated: 29 April 2022 10:15 PM GMT)

பெங்களூருவில் உழைப்பாளர் தினத்தில் ஊா்வலம் நடத்துவதற்கு தொழிலாளர் சங்கங்களுக்கு கர்நாடக ஐகோர்ட்டு அனுமதி மறுத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு:

ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு...

  பெங்களூருவில் ஊர்வலம், பேரணிகள் நடத்தப்படுவதால் நகரில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதன் காரணமாக பெங்களூருவில் ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி கிடையாது என்று கர்நாடக ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் வருகிற 1-ந் தேதி (அதாவது நாளை) உழைப்பாளர் தினத்தில் பிரமாண்ட ஊர்வலம் நடத்த தொழிலாளர்கள் சங்கங்கள் முடிவு செய்தது.

  அதாவது நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா (சிட்டி) ரெயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு ஊர்வலம் நடத்த முடிவு செய்திருந்தார்கள். இதையடுத்து, இந்த ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கர்நாடக ஐகோாட்டில் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

மனு தள்ளுபடி

  அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதிகளான தேவதாஸ், ஹேமலேகா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், உழைப்பாளர் தினத்தில் தொழிலாளா்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் செல்ல அனுமதி அளிக்க வேண்டும் என்று வாதிட்டார். இதனை ஏற்க நீதிபதிகள் மறுத்து விட்டார். பெங்களூருவில் ஊர்வலம், பேரணி நடத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

  அதனால் ரெயில் நிலையத்தில் இருந்து சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்த சாத்தியமில்லை. அந்த ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க முடியாது என்று நீதிபதிகள் தேவதாஸ், ஹேமலேகா உத்தரவிட்டார்கள். மேலும் தொழிலாளர்கள் சங்கங்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Next Story