நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்


நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 30 April 2022 12:40 PM GMT (Updated: 30 April 2022 12:40 PM GMT)

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. கோத்தகிரியில் பேரூராட்சி துணை இயக்குனர் முகாமை ஆய்வு செய்தார்.

கோத்தகிரி

நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. கோத்தகிரியில் பேரூராட்சி துணை இயக்குனர் முகாமை ஆய்வு செய்தார்.

சிறப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்தது. இதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மூலம், பல்வேறு கட்டங்களாக, சிறப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோத்தகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட 10 மையங்களில் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 


இதில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 2-வது டோஸ் தடுப்பூசி தேவைப்படுபவர்கள் மற்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் நிறைவடைந்த முதியவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. 

ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு

கோத்தகிரி பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று காலை தடுப்பூசி முகாமை நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோத்தகிரி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர். மேலும் பேரூராட்சி வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கி மற்றும் கை ஒலிப்பெருக்கிகள் மூலமாக, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து தொடர்ந்து அறிவிப்பு செய்யப்பட்டது. 

இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள், முதியவர்கள், 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல் ஊட்டி, கூடலூரில் தடுப்பூசி முகாம் நடந்தது. 

Next Story