கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்திய ரூ.4½ கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்


கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்திய ரூ.4½ கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்
x
தினத்தந்தி 30 April 2022 1:45 PM GMT (Updated: 30 April 2022 1:45 PM GMT)

கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்திய ரூ.4½ கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளை கேரளா போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்

கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்திய ரூ.4½ கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டு பாக்கெட்டுகளை கேரளா போலீசார் பிடித்தனர். இதுதொடர்பாக போலீசார் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் சோதனை

கர்நாடகா மாநிலத்தில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு போதைப்பொருள் கடத்துவதாக வழிக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து வழிக்கடவு சோதனைச்சாவடியில் நின்றவாறு கூடலூரில் இருந்து வரும் வாகனங்களை போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது வந்த ஒரு லாரியை நிறுத்தி டிரைவரிடம் விசாரித்தனர். உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அவர் தெரிவித்தார். இருப்பினும் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது காய்கறி மூட்டைகளை மேல்பக்கம் அடுக்கி வைத்தவாறு அதற்கு அடியில் ஏராளமான பண்டல்கள் இருப்பதை கண்டனர். இதைத்தொடர்ந்து காய்கறி மூட்டைகளை அகற்றிவிட்டு திறந்து பார்த்தனர். அதில் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இருப்பதை கண்டனர்.

ரூ.4½ கோடி சிகரெட்டுகள் பறிமுதல்

இதைத்தொடர்ந்து கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த லாரி டிரைவர் ராபர்ட் (வயது 30), கிளீனர் பிரஷீத் (30) ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது கொரியா நாட்டு சிகரெட்டுகள் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து பெங்களூரு, மைசூரு, கூடலூர் வழியாக கேரளாவுக்கு கடத்தி வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 150 பண்டல்களில் 1½ லட்சம் பாக்கெட்டுகளில் ரூ.4½ கோடி மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது எந்தவித வரிகளும் செலுத்தாமல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் ராபர்ட், கிளீனர் பிரஷீத் ஆகியோரிடம் போலீசார், சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறும்போது, பிடிபட்ட லாரி டிரைவர் ஏற்கனவே மற்றொரு கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்தனர்.

Next Story