கஞ்சா கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கஞ்சா கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 30 April 2022 1:52 PM GMT (Updated: 30 April 2022 1:52 PM GMT)

தூத்துக்குடியில் கஞ்சா கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தூத்துக்குடி;
தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் கன்னியாகுமரி இந்திராநகர், அழகப்பபுரம் பகுதியை சேர்ந்த ஜேசு எமர்சன் மகன் மரிய அலெக்ஸ் பிரிட்டோ (வயது 22) என்பவர் உள்பட 4 பேரை தாளமுத்துநகர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 24 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கார், இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் கைதான மரிய அலெக்ஸ் பிரிட்டோ மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மரிய அலெக்ஸ் பிரிட்டோவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் நகலை தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மதுரை மத்திய சிறையில் ஒப்படைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 30 நாட்களில் 30 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த ஆண்டு இதுவரை போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 23 பேர் உள்பட 84 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Next Story