தடுப்பு சுவரில் கார் மோதி டிரைவர் பலி; 6 பேர் காயம்


தடுப்பு சுவரில் கார் மோதி டிரைவர் பலி; 6 பேர் காயம்
x
தினத்தந்தி 2 May 2022 8:43 PM GMT (Updated: 3 May 2022 5:28 AM GMT)

கன்னியாகுமரி அருகே சுற்றுலா வந்து விட்டு திரும்பி சென்ற போது தடுப்பு சுவரில் கார் மோதி டிரைவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.

கன்னியாகுமரி:
கன்னியாகுமரி அருகே சுற்றுலா வந்து விட்டு திரும்பி சென்ற போது தடுப்பு சுவரில் கார் மோதி டிரைவர் பலியானார். 6 பேர் காயம் அடைந்தனர்.
கார் விபத்து
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அய்யனார்குளம்பட்டியை சேர்ந்த 7 பேர் ஒரு சொகுசு காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் கன்னியாகுமரியில் பல இடங்களை சுற்றி பார்த்து ரசித்தனர்.
பின்னர் அவர்கள் நேற்று இரவு ஊர் திரும்புவதற்காக நெல்லை நோக்கி காரில் புறப்பட்டனர்.
கன்னியாகுமரியை அடுத்த மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் சென்றபோது திடீரென கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ரவுண்டானா தடுப்பு சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது.
டிரைவர் பலி
இந்த விபத்தில் காரில் இருந்த ஸ்ரீவைகுண்டம் கல்வாயை சேர்ந்த டிரைவர் வேல்முருகன் (வயது 37) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். முருகன், பூவலிங்கம், கந்தசாமி, சுடலை, சின்னத்துரை, பெத்தலிங்கம் ஆகிய 6 பேர் காயமடைந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வேல்முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. 
மேலும் இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
சுற்றுலா வந்த இடத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story