கொரட்டூரில் ஒரே நாளில் சம்பவம்: தம்பி தற்கொலை செய்த விரக்தியில் அண்ணனும் தூக்குப்போட்டு சாவு


கொரட்டூரில் ஒரே நாளில் சம்பவம்: தம்பி தற்கொலை செய்த விரக்தியில் அண்ணனும் தூக்குப்போட்டு சாவு
x
தினத்தந்தி 5 May 2022 5:52 AM GMT (Updated: 5 May 2022 5:52 AM GMT)

தம்பி தற்கொலை செய்து கொண்ட விரக்தியில் அண்ணனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

திரு.வி.க. நகர்,

சென்னை கொரட்டூர் எல்லையம்மன் நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45). இவருடைய அண்ணன் சேட்டு(50). இவர்கள் இருவரும் சேர்ந்து கொரட்டூர் ரெயில் நிலையம் அருகில் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்தனர்.

சுரேசுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். சேட்டு, கடந்த 4 வருடங்களாக தனது குடும்பத்தை விட்டு பிரிந்து தம்பி சுரேஷ் வீ்ட்டருகே தனியாக வசித்து வந்தார். குடிபோதைக்கு அடிமையான சுரேஷ், கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதனால் விரக்தி அடைந்த சுரேஷ், நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இ்ந்த தகவல் அருகில் வசிக்கும் அவரது அண்ணன் சேட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த சேட்டு, குடும்பத்தை பிரிந்து தனியாக வசித்து வந்த தனக்கு ஆறுதலாக இருந்த தம்பி தற்கொலை செய்து கொண்டானே என்ற விரக்தியில் சேட்டுவும் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரே நாளில் அடுத்தடுத்து தம்பி, அண்ணன் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி கொரட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், பச்சமுத்து ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்த அண்ணன்-தம்பி இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story