‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 10 May 2022 4:42 PM GMT (Updated: 10 May 2022 4:42 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்: 

அடிப்படை வசதிகள் தேவை 
திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி ஊராட்சி சாலையூர் ஆதிதிராவிடர் காலனியில் சாலை, சாக்கடை கால்வாய் வசதிகள் முழுமையாக இல்லை. இதனால் கழிவுநீர் சீராக வெளியேறாமல் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சில பகுதிகளில் சாலை இல்லாததால் சாரல் மழைக்கே சகதிக்காடாக மாறிவிடுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். 
-குமரேசன், சீலப்பாடி.

சேதம் அடைந்த மின்கம்பம் 
சாணார்பட்டி ஊராட்சி கோணப்பட்டியில் அங்கன்வாடி மையத்தின் பின்பகுதியில் உள்ள மின்கம்பம் சேதம்அடைந்து விட்டது. மின்கம்பத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதோடு மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்று வீசும் நேரத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்து விடுமோ? என்ற அச்சத்தில் வசிக்கின்றனர். எனவே சேதம் அடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நடவேண்டும். 
-காளிதாஸ், கோணப்பட்டி.

தெருவில் தேங்கிய கழிவுநீர் 
தேனி அரண்மனைபுதூரில் விநாயகர் கோவில் அருகே உள்ள பகுதி பள்ளமாக இருப்பதால், கழிவுநீர் தெருவில் தேங்கி நிற்கிறது. இதனால் வீடுகளில் மக்கள் வசிக்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. கொசுத்தொல்லையும் அதிகரித்துள்ளது. எனவே கழிவுநீர் தெருவில் தேங்காமல் வெளியேற சாக்கடை கால்வாய் அமைக்க வேண்டும். 
-முருகன், தேனி.

மின்சாரம் துண்டிப்பால் அவதி 
வேம்பார்பட்டி அருகே செடிபட்டி சாலை பகுதியில் நின்ற மின்கம்பம், கடந்த வாரம் வீசிய பலத்த காற்றுக்கு முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனினும் இதுவரை புதிய மின்கம்பம் நட்டு மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் வீடுகள், விவசாய பம்புசெட்டுகளுக்கு மின்சாரம் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். பொதுமக்களின் நலன்கருதி புதிய மின்கம்பத்தை நட்டு மின்இணைப்பு வழங்க வேண்டும். 
-தமிழ், வேம்பார்பட்டி.

சுகாதாரக்கேடு அபாயம் 
தேனி அல்லிநகரம் 12-வது வார்டு குறிஞ்சிநகரில் சாக்கடை கால்வாய் முறையாக இல்லை. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் குப்பைகளும் கொட்டப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு உருவாகும் அபாயம் உள்ளது. அதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-வீரகுரு, அல்லிநகரம்.

Next Story