ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் அளிக்க வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்


ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் அளிக்க வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 10 May 2022 5:51 PM GMT (Updated: 10 May 2022 5:51 PM GMT)

பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் அளிக்க வேண்டும் என்று ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தி உள்ளது.

நாமக்கல்:
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 4 மி.மீட்டர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அடுத்த 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும். 
வெப்பநிலையை பொறுத்த வரை அதிகபட்சமாக 98.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும். சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் காற்றின் வேகம் தொடர்ந்து, அதிகமாக காணப்படுவதால், தீவனம் வீணடிக்கபடாமல் பாதுகாத்து கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளர்கள் ஈடுபட வேண்டும். 
ஈ கட்டுப்பாடு
இன்னும் 2 மாதங்களுக்கு காற்றின் வேகம் அதிகமாக கொண்ட வானிலை நிலவும். தீவன விரயத்தை தடுக்க தீவனத்தில் சிறிது அளவு எண்ணெய் சேர்க்கலாம். இதனால் மதிப்புள்ள வைட்டமின் போன்றவை காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும் உயர்ந்த பண்ணைகளில் பக்கவாட்டில் படுதாவை தொங்கவிட வேண்டும்.
தற்போது நாமக்கல் மற்றும் அதனை சுற்றி உள்ள மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை மாலை நேரங்களில் பெய்து வருகிறது. இருப்பினும் பகல் நேரங்களில் வெப்ப சலனம் அதிகமாகி உள்ளதால், பூச்சி இனங்களின் இனப்பெருக்கத்திற்கு உகந்ததாக இருக்கும். எனவே கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும். பண்ணைகளில் தண்ணீர் கசிவு இல்லாமல் இருக்க பழுதடைந்த நிப்பில்களை மாற்ற வேண்டும்.
மருந்து கலந்த தீவனம்
இறந்த கோழிகள் மற்றும் உடைந்த முட்டைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தீவன சிதறல்களை தவிர்க்க வேண்டும். பண்ணைகளில் ஈக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கோழிகளுக்கு மருந்து கலந்த தீவனம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story