13,893 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்


13,893 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 10 May 2022 5:55 PM GMT (Updated: 10 May 2022 5:55 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் 13,893 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். 676 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.

திருவாரூர், மே.11-
திருவாரூர் மாவட்டத்தில் 13,893 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுதினர். 676 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு 
தமிழகத்தில் பிளஸ்-1 வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. வருகிற 31-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. திருவாரூர் மாவட்டத்தில் 120 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 969 மாணவர்கள், 7 ஆயிரத்து 600 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 569 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். இந்த தேர்வு 55 மையங்களில் நடைபெற்றது. அனைத்து தேர்வு மையங்களிலும் தவறுகளை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தடையில்லா மின்சாரம்
தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. முதல்நாள் தேர்வில் 6 ஆயிரத்து 519 மாணவர்களும், 7 ஆயிரத்து 374 மாணவிகளும் என மொத்தம் 13 ஆயிரத்து 893 பேர் தேர்வு எழுதினர். இதில் 450 மாணவர்கள், 226 மாணவிகள் என மொத்தம் 6,76 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதவரவில்லை. இந்த தேர்வு பணிக்கு 1,238 ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
ஒழுங்கீன செயல்கள்
காப்பி அடித்தல், அனுமதிக்கப்படாத துண்டு சீட்டுகள் எடுத்து செல்லுதல் போன்ற ஒழுங்கீன செயல்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து வித முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. தேர்வுகளை கண்காணிக்க கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் 5 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 55 நிலையான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டது.

Next Story