வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 10 May 2022 8:48 PM GMT (Updated: 10 May 2022 8:48 PM GMT)

தஞ்சையில், கல்லூரி பேராசிரியையிடம் நகை பறித்த சம்பவத்தில் தொடர்புடைய 2 வழிப்பறி கொள்ளையர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. வழிப்பறி கொள்ளையர்கள் 2 பேரும் நாகையை சேர்ந்தவர்கள் ஆவர்.

தஞ்சாவூர்
நாகை காடம்பாடி புதிய நம்பியார் நகரை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சிட்டு என்ற பிரகாஷ்ராஜ்(வயது 22). அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் அகத்தியன் என்ற ராஜசேகர்(24). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பார்வதி நகரை சேர்ந்த கல்லூரி பேராசிரியை கோமதியை தாக்கி 10 பவுன் சங்கிலியை பறித்துச்சென்றனர்.இது தொடர்பாக தஞ்சை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்பறி கொள்ளையர்களான இவர்கள் 2 பேர் மீதும் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.
குண்டர் சட்டம் பாய்ந்தது
இந்த நிலையில் பிரகாஷ்ராஜ், ராஜசேகர் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன், குற்றம் சாட்டப்பட்ட பிரகாஷ்ராஜ், ராஜசேகர் ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவை திருச்சி மத்திய சிறைச்சாலை அதிகாரிகளிடம் வழங்கினர்.

Next Story