தர்மபுரியில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை: தனியார் நிறுவன ஊழியர் கைது


தர்மபுரியில் இரும்பு கம்பியால் தாக்கி வாலிபர் கொலை: தனியார் நிறுவன ஊழியர் கைது
x
தினத்தந்தி 11 May 2022 4:17 PM GMT (Updated: 11 May 2022 4:17 PM GMT)

தர்மபுரியில் வாலிபர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொந்தரவு விவகாரத்தால் இந்த விபரீதம் நடந்துள்ளது.

தர்மபுரி:
தர்மபுரியில் வாலிபர் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொந்தரவு விவகாரத்தால் இந்த விபரீதம் நடந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர் கொலை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள பாலஜங்கமனஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 29). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ வளாகத்தின் முன்பு அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சென்னன் (23) என்பவரால் இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி டவுன் போலீசார் விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மற்றும் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து சென்னனை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பாலியல் தொந்தரவு
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
சென்னனின் சகோதரியான 30 வயது பெண் திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் பாலஜங்கமனஅள்ளி பகுதியில் வசித்து வருகிறார். இவருடைய கணவர் சேலத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அந்த பெண் வீட்டின் அருகே தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற ராஜேஷ் அவருடைய கைகளை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் ராஜேஷ் அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயமடைந்த அந்த பெண் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்ககாக சேர்க்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்த பெண்ணின் உறவினர்கள் ராஜேசை தாக்கினார்கள். இதில் காயமடைந்த ராஜேஷ் சிகிச்சை பெறுவதற்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். 
பரபரப்பு
அப்போது ஆஸ்பத்திரி வளாகத்தின் முன்பு நின்று கொண்டிருந்த ராஜேசை பார்த்து ஆத்திரமடைந்த சென்னன் கையில் இருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினார். இதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட விபரீத சம்பவம் தர்மபுரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story