ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 110 வாகனங்கள் பறிமுதல்


ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்ட 110 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 11 May 2022 4:18 PM GMT (Updated: 11 May 2022 4:18 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
வாகன சோதனை
சென்னை போக்குவரத்து ஆணையர் உத்தரவின்படியும், நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுரையின் பேரிலும் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் (ஏப்ரல்) பல்வேறு பகுதிகளில் வட்டார போக்குவரத்து துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின் போது வட்டார போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன் ஆகியோர் தலைமையில், நாமக்கல் வடக்கு, தெற்கு மற்றும் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், இந்த அலுவலகங்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் ராசிபுரம், பரமத்திவேலூர் பகுதி மோட்டார் வாகன ஆய்வாளர்களால் 3,811 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 891 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை அளிக்கப்பட்டது. மேலும் ரூ.7 லட்சத்து 52 ஆயிரத்து 633 வரியும், ரூ.11 லட்சத்து 38 ஆயிரத்து 200 அபராதமும் வசூல் செய்யப்பட்டது.
110 வாகனங்கள் பறிமுதல்
அதேபோல் 531 வாகனங்களுக்கு ரூ.20 லட்சத்து 81 ஆயிரத்து 800 அபராதம் நிர்ணயம் செய்யப்பட்டது.மேலும் தகுதிசான்று புதுப்பிக்காதது, அனுமதி சீட்டு இல்லாமல் வாகனங்களை இயக்கியது, வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகனம் என போதிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 110 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக வட்டார போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.

Next Story