ஓசி பிரியாணி வாங்கிக்கொண்டு பணம் கேட்டு கடைக்காரர் மீது தாக்குதல்


ஓசி பிரியாணி வாங்கிக்கொண்டு பணம் கேட்டு கடைக்காரர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 11 May 2022 4:42 PM GMT (Updated: 11 May 2022 4:42 PM GMT)

பண்ருட்டி அருகே ஓசி பிரியாணி வாங்கிக்கொண்டு பணம் கேட்டு கடைக்காரரை தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் அப்துல் கலாம் (வயது 49). இவர் திருவதிகையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு பண்ருட்டி செட்டிபட்டறை காலனியை சேர்ந்த சண்முகம்(37) மற்றும் மேல்கவரப்பட்டை சேர்ந்த நபர் ஒருவரும் வந்தனர். 

பின்னர் சண்முகம் அப்துல் கலாமிடம் ஐநூறு ரூபாய் நோட்டை கொடுத்து 2 பார்சல் பிரியாணி வாங்கினார். அப்போது அப்துல்கலாம் தன்னிடம் சில்லறை இல்லை என்று கூறி வாங்கிய 500 ரூபாய் நோட்டை சண்முகத்திடம் திருப்பிக் கொடுத்தார். அதை வாங்கிய அவர் சில்லறை மாற்றிக்கொண்டு வருவதாக கூறிவிட்டு இருவரும் அங்கிருந்து சென்றனர். சில மணி நேரம் கழித்து பிரியாணி கடைக்கு வந்த அவர்கள் 2 பேரும் அப்துல் கலாமிடம் 500 ரூபாயை திரும்ப கொடு என்று கேட்டனர். 

இதனால் அதிர்ச்சி அடைந்த அப்துல் கலாம் சில்லறை மாற்றிக்கொண்டு வருதவதாக கூறி பணத்தை நீங்கள்தானே வாங்கி சென்றீர்கள். நீங்கள் தான் பிரியாணிக்கு பணம் தரவேண்டும் என கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சண்முகம் உள்ளிட்ட இவரும் சேர்ந்து அப்துல் கலாமை கீழே நெட்டித் தள்ளி ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து அப்துல்கலாம் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகம் உள்பட 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story