குடிபோதையில் கத்தியால் தாக்கிய கணவனை வெட்டிக்கொன்ற மனைவி


குடிபோதையில் கத்தியால் தாக்கிய கணவனை வெட்டிக்கொன்ற மனைவி
x
தினத்தந்தி 11 May 2022 4:52 PM GMT (Updated: 11 May 2022 4:52 PM GMT)

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கிய கணவனை, மனைவியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர்

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் தாக்கிய கணவனை, மனைவியே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுபோதையில் தகராறு

வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் (வயது 60). லாரி ஷெட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கோமதி (48), வேலூர் வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மற்றொரு மகள் கல்லூரியில் படித்து வருகிறார்.

குமரவேல், மதுவுக்கு அடிமையாகி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் சரியாக வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றித்திரிந்து வந்துள்ளார். மேலும் தினமும் மது போதையில் வீட்டுக்கு வரும் அவர் கோமதியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  அவர் குடித்து விட்டு மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார்.

வெட்டிக்கொலை

இதனால் அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த குமரவேல், கத்தியை எடுத்து கோமதியை வெட்டி உள்ளார். இதில் அவரது முகம், நெற்றி உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. 

உயிர் தப்பிப்பதற்காக கோமதி, கத்தியை பிடுங்கி குமரவேலை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த குமரவேல் அங்கேயே துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மேலும் படுகாயமடைந்த கோமதியை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

அதைத்தொடர்ந்து கொலை செய்யப்பட்ட குமரவேல் உடலை பிரேத பரிசோதனைக்கு அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோமதியை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
============

Next Story