தினத்தந்தி புகார் பெட்டி


பெரம்பலூர்
x
பெரம்பலூர்
தினத்தந்தி 11 May 2022 4:55 PM GMT (Updated: 11 May 2022 4:55 PM GMT)

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

போக்குவரத்துக்கு இடையூறு
பெரம்பலூரில் முக்கிய பகுதிகளான புதிய, பழைய பஸ் நிலையங்கள், பாலக்கரை, ரோவர் வளைவு, சங்குபேட்டை, காமராஜர் வளைவு, நான்கு ரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழனிசாமி, பெரம்பலூர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி வேண்டும்
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட் கிழமை குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்து வருகிறது. அதில் மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் வந்து புகார் மனு கொடுத்து செல்கின்றனர். இந்தநிலையில் கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பஸ் நிலையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் உள்ளே செல்வதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலியோ, பேட்டரி காரோ இல்லை. இதனால் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சக்கர நாற்காலி அல்லது பேட்டரி கார் வசதி அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அறிவு, அரியலூர். 



Next Story