விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்


விவசாயிகள் அங்ககச்சான்று பெற  விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 11 May 2022 5:38 PM GMT (Updated: 11 May 2022 5:38 PM GMT)

இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று குமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா கூறியுள்ளார்.

நாகர்கோவில்:
இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள் அங்ககச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று குமரி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் ஷீபா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தரச்சான்று
இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிகொல்லிகள் இன்றி மேற்கொள்ளப்படும் விவசாயத்துக்கும் அதன் மூலம் விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கும் மக்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என விற்பனை செய்யப்படும் விளைபொருட்களை வாங்கும் போது அவற்றுக்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அவற்றின் இயற்கை தன்மை உறுதி செய்யப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தரச்சான்று என்பது அவசியமான ஒன்றாக உள்ளது. தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றளிப்புத்துறை மூலம் அனைத்து மாவட்டங்களிலும் விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு அங்ககசான்றளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அங்கக சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய அங்கக வேளாண்மை செயல் திட்டத்தின்படி அபீடா நிறுவனத்தின் வழிகாட்டுதல் மற்றும் அங்கீகாரத்தின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. அங்ககசான்றளிப்பு பணி தனிநபர் பதிவு, குழுப்பதிவு மற்றும் பெருவணிக, நிறுவனபதிவு என பல்வேறு நிலைகளில் மேற்கொள்ளப்படுகிறது. பயிர் உற்பத்தியுடன் கால்நடை பராமரிப்பு, உணவு பதப்படுத்துதல் மற்றும் கையாளுதல், தேனீ வளர்ப்பு மற்றும் வனப்பொருட்கள் சேகரிப்பு செய்வோர்களும் அங்ககச்சான்றினை பெற்றுக் கொள்ளலாம்.
பதிவுக்கட்டணம்
இந்த சான்றிதழைப் பெறுவதற்கு விண்ணப்பபடிவம் (3 நகல்கள்), பண்ணையின் பொது விவரக்குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர்பரிசோதனை விவரம், ஆண்டு பயிர்திட்டம் (3 நகல்கள்), துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம் (சிட்டா), வருமானவரி கணக்கு நிரந்தரஅட்டை, ஆதார் நகல், 2 பாஸ் போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பதிவு கட்டணம் வரைவோலை அல்லது இணையவழி ரசீது ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.
பதிவு கட்டணம் சிறு குறு விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரத்து 700-ம், மற்ற விவசாயிகள் ரூ.3 ஆயிரத்து 200-ம் செலுத்த வேண்டும். குழுவாக பதிவு செய்ய ரூ.7 ஆயிரத்து 200-ம், வணிக நிறுவனங்களுக்கு ரூ.9 ஆயிரத்து 400-ம் வங்கி வரைவோலை மூலம் செலுத்த வேண்டும். விவசாயிகள் அங்ககசான்றளிப்பு குறித்த சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு நாகர்கோவில் ஒழுகினசேரி தீயணைப்பு நிலையம் அருகில் உள்ள குமரி மாவட்ட விதைசான்று மற்றும் அங்ககச் சான்றளிப்பு உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story