கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம்; அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது


கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம்; அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 11 May 2022 8:55 PM GMT (Updated: 11 May 2022 8:55 PM GMT)

கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நேற்று நடந்தது.

ஈரோடு
கீழ்பவானி வாய்க்காலில் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடன் கருத்துக்கேட்பு கூட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நேற்று நடந்தது.
கருத்துக்கேட்பு கூட்டம்
கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம், கான்கிரீட் சுவர் அமைக்கும் திட்டத்திற்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடக்கிறது. கான்கிரீட் தளம், சுவர் அமைத்தால் கசிவு நீர் மூலம் பாசனம் பெறும் நிலங்கள், நிலத்தடி நீர், பொதுமக்கள், கால்நடைகளின் குடிநீராதாரம் பாதிக்கும் என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மற்றொரு தரப்பினர் கடைமடை வரை நீர் செல்ல வேண்டும். வீணாகும் நீரை தடுக்க வாய்க்காலை நவீனப்படுத்த வேண்டும். எனவே கான்கிரீட் தளம், சுவர் அமைக்க வேண்டும் என்று ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், கீழ்பவானி திட்டத்தின் கீழ் வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து விவசாயிகளுடனான கருத்துக்கேட்பு கூட்டம், ஈரோடு மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார்.
கான்கிரீட் தளம்                அமைக்கக்கூடாது
இதைத்தொடர்ந்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கீழ்பவானி வாய்க்கால் தண்ணீர் விவசாயத்திற்கு முழுமையாக பயன்படுகின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கடைமடைக்கு தண்ணீர் போய் சேர வேண்டும். அதேநேரத்தில் அதற்கு முன்னால் இருக்கக்கூடிய விவசாய நிலங்களுக்கு ஆரம்பத்தில் கிடைத்து கொண்டு இருந்த தண்ணீர் குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
தண்ணீர் வீணாக ஆற்றுக்கு செல்கின்ற சூழ்நிலை ஏற்படக்கூடாது. மேலும் தண்ணீர் முழுவதும் கடைமடை வரை வீணாகாமல் விவசாயத்திற்கு பயன்படுகின்ற வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். வாய்க்கால் அடிப்பகுதியில் கான்கிரீட் போடும் பணி மேற்கொள்ள இருந்தது. தற்போது விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, கான்கிரீட் தளம் அமைக்கக்கூடாது என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பழுதடைந்த பாலங்கள்
வாய்க்கால்களின் பக்கவாட்டு பகுதியில் முழுமையாக சேதமான இடங்களில் அமைத்துள்ள தடுப்புச்சுவர்கள் சீர் செய்யப்பட உள்ளது. கீழ்பவானி திட்டத்தினை பயன்படுத்துகின்ற விவசாயிகள் மற்றும் கடைமடையில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவதே அரசின் நோக்கமாகும். தற்போது வாய்க்காலை ஒட்டி உள்ள பழுதடைந்த பாலங்கள் சிறிய அளவில் இருப்பதால் அதனை பெரிது படுத்தி டிராக்டர் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் விரிவுப்படுத்திட விவசாயிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெறுகின்ற விவசாயிகள் அனைவரும் முழுமையாக பாசனத்திற்கு தண்ணீர் பயன்படுத்த வேண்டும். மேலும் கிணறுகளில் ஊற்று மூலம் தண்ணீர் பெறுகின்ற விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகள் இரு பிரிவாக வெவ்வேறு கருத்துகளுடன் உள்ளனர்.
கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்
ஒரு பக்கம் கான்கிரீட் அமைப்பதால் மேல்மடையில் இருக்கின்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள். விவசாயிகள் ஒருங்கிணைந்து ஆலோசனை மேற்கொண்டு தங்களின் கருத்துக்களை நாளை (அதாவது இன்று) மதியத்துக்குள் தெரிவிக்குமாறு விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story