மகுடஞ்சாவடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் 6 துணை மின்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை கலெக்டர் கார்மேகம் தகவல்


மகுடஞ்சாவடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில்  6 துணை மின்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை  கலெக்டர் கார்மேகம் தகவல்
x
தினத்தந்தி 11 May 2022 9:21 PM GMT (Updated: 11 May 2022 9:21 PM GMT)

மகுடஞ்சாவடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் 6 துணை மின்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர்் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம், 
ஆய்வுக்கூட்டம்
தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறைகளின் ஒருங்கிணைப்புக்குழு ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீர் மற்றும் மின்சாரம் பொதுமக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அலுவலர்களுடனான ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் நீரேற்று நிலையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கென மேட்டூர் தொட்டியம்பட்டியில் துணை மின்நிலையம் அமைக்க உள்ள பணியை விரைவு படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துணை மின் நிலையங்கள்
மேலும், மேட்டூரில் மின் தேவைக்கு ஏற்ப கூடுதலாக மின் உற்பத்திக்கு தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, மகுடஞ்சாவடி, ஆத்தூர் ஆகிய பகுதிகளில் 6 துணை மின்நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு உரிய அரசு நிலத்தை மின்சாரத்துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரிய மேலாண் இயக்குனரின் உத்தரவுப்படி சோலார் மின்உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு ஏதுவாக தேவைப்படும் 200 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண தமிழ்நாடு மின்சார வாரிய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் பகுதிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும், மழை மற்றும் காற்றின் போது மின்சாரம் தடைபடாமல் மின்பாதைகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
தயார் நிலையில்
மழை காலங்களில் மின் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யும் வகையில் தேவையான பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதை மின்சாரத்துறை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கார்மேகம் பேசினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர்கள் கோபாலகிருஷ்ணன், தண்டபாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதாபிரியா, செயற்பொறியாளர்கள் புஷ்பலதா, அன்பரசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் குணசேகரன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story