காளைமாடு சிலை அருகே ரெயில்வே நுழைவுப்பாதை ரோட்டை சீரமைக்க நடவடிக்கை


காளைமாடு சிலை அருகே ரெயில்வே நுழைவுப்பாதை ரோட்டை சீரமைக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 11 May 2022 9:26 PM GMT (Updated: 11 May 2022 9:26 PM GMT)

ஈரோடு காளைமாடு சிலை அருகே ரெயில்வே நுழைவு பாதை ரோட்டை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

ஈரோடு
ஈரோடு காளைமாடு சிலை அருகே ரெயில்வே நுழைவு பாதை ரோட்டை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ரெயில்வே நுழைவு பாதை
ஈரோடு மாநகரில் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக காளைமாடு சிலை அருகே உள்ள ரெயில்வே நுழைவு பாதை உள்ளது. இங்கு தினசரி மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி கடும் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று சில ஆண்டுகளாகவே பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்தநிலையில் சம்பந்தப்பட்ட இடத்தில் வாகனங்கள் வேகமாக செல்லும் வகையிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வாகனங்கள் தொடர்ச்சியாக செல்லும் வகையிலும் நடவடிக்கை எடுக்க தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
சீரமைப்பு நடவடிக்கை
அதைத்தொடர்ந்து தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு காளைமாடு சிலை அருகே உள்ள ரெயில்வே நுழைவு பாதை சாலையை செப்பனிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
விரைவில் இதற்கான பணி தொடங்க உள்ளது. இந்த பணிகள் தொடங்கினால் சுமார் 2 மாத காலம் காளைமாடு சிலையில் இருந்து கொல்லம்பாளையம் பகுதிக்கு பூந்துறை ரோடு வழியாக வாகனங்கள் செல்ல முடியாது. எனவே சென்னிமலை ரோடு, சாஸ்திரி நகர் மேம்பாலம் வழியாக நாடார் மேடு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அமைச்சர் சு.முத்துசாமியின் தீவிர நடவடிக்கையால் முதல் கட்டமாக சாலை சீரமைக்கும் பணி நடக்க இருப்பதுபோல, விரைவில் இந்த பகுதியில் மேம்பாலம் அமைத்து போக்குவரத்து நெரிசல் ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Next Story