மணலி புதுநகரில் ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரி கடத்தல் - 5 பேர் கைது


மணலி புதுநகரில் ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரி கடத்தல் - 5 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2022 2:04 PM GMT (Updated: 14 May 2022 2:04 PM GMT)

மணலி புதுநகரில் ரூ.25 லட்சம் கேட்டு வியாபாரியை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவொற்றியூர்,

சென்னை மணலி புதுநகரை அடுத்த விச்சூர் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் வினோத் (வயது 32). இவர், நெற்குன்றத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து சிமெண்ட் கலவை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவரை ஒரு கும்பல் கடத்தி வைத்துக்கொண்டு ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டுவதாக வினோத்தின் தாயார் மணலி புதுநகர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் கொடிராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து வினோத்தை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஆவடியில் கடத்தி வைக்கப்பட்டிருந்த வினோத்தை தனிப்படை போலீசார் மீட்டனர். மேலும் வினோத்தை கடத்தியதாக செனாய் நகரைச் சேர்ந்த டெல்லி பாபு (52), சிவகணேஷ் (35), அரிகிருஷ்ணன் (27), பரத்குமார் (27), பாஸ்கரன் (49) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

சிமெண்ட் கலவை வாங்கியதற்கான நிலுவைத்தொகை செலுத்தாததால் வினோத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்களே ஆள் வைத்து கடத்தியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story