காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தி.மு.க.வின் முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை


காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தி.மு.க.வின் முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 2 April 2019 11:00 PM GMT (Updated: 2 April 2019 9:31 PM GMT)

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தி.மு.க.வின் முக்கிய வாக்குறுதிகள் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

மகிழ்ச்சி அளிக்கிறது

தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள முக்கிய வாக்குறுதிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, இது வரவேற்புக்குரியது. மாநிலங்களின் உரிமைகளை மதித்து மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற தி.மு.க.வின் உயிர் மூச்சான ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றைப் பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை அமைந்திருப்பது மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இது 17-வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும் முன்பே தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியாகவே நான் கருதுகிறேன். ஏழைகளுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் குறைந்தபட்ச வருவாயாக வழங்கப்படும் என்ற ஏழ்மை ஒழிப்புத்திட்டம் இந்திய வரலாற்றில் மிக முக்கிய சாதனையாக அமையப்போகிறது என்பது இத்தேர்தல் அறிக்கை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

விவசாய கடன் தள்ளுபடி

ஏழைகளை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் ஒரு அரசு, வருகின்ற ஜூன் 3-ந் தேதிக்கு பிறகு மத்தியில் அமையப்போகிறது என்பது இந்திய திருநாட்டில் உள்ள 25 கோடி ஏழைகளின் முகங்களிலும் புன்முறுவலைக் கொண்டு வந்திருக்கிறது. தமிழக மாணவர்களின் கனவான நீட் தேர்வு ரத்து என்ற காங்கிரசின் வாக்குறுதி எண்ணற்ற இளைஞர்களின் இதயத்தில் பால் வார்க்கிறது.

மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டிடும் வகையில் பொதுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களை மாநில பட்டியலுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்பதும், பள்ளிக்கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்படும் என்பதும் மாநிலங்களின் தன்மானம் போற்றப்படும் அறிவிப்புகள். விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது கடனில் துடித்துக்கொண்டிருந்த நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் அறிவிப்பாக அமைந்துள்ளது.

தனி அமைச்சகம்

இதுதவிர, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும், ஜி.எஸ்.டி. சட்டம் மறு ஆய்வு செய்யப்படும், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்படும், வேளாண்மைக்கு தனி நிதி நிலை தாக்கல் செய்யப்படும் என்பன போன்ற காங்கிரசின் வாக்குறுதிகளும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துள்ளது தி.மு.க. என்று கேலியும், கிண்டலும் பேசியவர்களுக்கு கெட்டியான வாய்ப்பூட்டு போட்டிருக்கிறது.

பாரம்பரியமிக்க மாநில கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதிகளுக்கு மத்தியில் ஆட்சியமைக்கப் போகும் இன்னொரு பாரம்பரியமிக்க தேசிய கட்சியின் ஒப்புதல் கிடைத்திருப்பது ஏழரைக் கோடி தமிழர்களின் குரலுக்கு காங்கிரஸ் கட்சி அளிக்கும் மதிப்பிற்கும், ஒப்புதலுக்கும் மிகச்சிறந்த உதாரணமாக உள்ளது. சுருக்கமாகச் சொன்னால், அனைத்துத் தரப்பு மக்களையும் அரவணைத்துச் சென்று, பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவைப் பாதுகாக்கும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் வழங்கியிருக்கிறது.

செயல்பாட்டுக்கு வரும்

ஆகவே, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்ற கருணாநிதியின் தாரகமந்திரத்திற்கும், சோனியாகாந்தியின் தொலை நோக்குப்பார்வைக்கும், இந்த நாட்டின் வருங்கால பிரதமர் ராகுல்காந்தி ஏழைகளின் மீதுள்ள ஆழ்ந்த அக்கறைக்கும் சான்றாவணமாக திகழ்கிறது.

இனிமேலாவது நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அளித்துள்ளது என்று விதண்டாவாதம் செய்வோர் அதுபோன்ற கருத்துகளில் இருந்து விடை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதோடு, தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் சாத்தியக்கூறுகள் மிகுந்தவை என்றும், இந்த வாக்குறுதிகள் எல்லாம் நிச்சயம் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்தவுடன் ஜூன் 3-ந் தேதிக்கு பிறகு ஒவ்வொன்றாக செயல்பாட்டுக்கு வரும் என்பதையும் ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story