வாக்காளர்களுக்கு ரூ.650 கோடி வினியோகம் 2016 தேர்தலில் தி.மு.க. வெற்றியை பணத்தால் தட்டிப்பறித்துள்ளனர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை


வாக்காளர்களுக்கு ரூ.650 கோடி வினியோகம் 2016 தேர்தலில் தி.மு.க. வெற்றியை பணத்தால் தட்டிப்பறித்துள்ளனர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
x
தினத்தந்தி 14 April 2019 4:15 AM IST (Updated: 14 April 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

2016 தேர்தலில் தி.மு.க. வெற்றியை பணத்தால் தட்டிப்பறித்து உள்ளனர் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

சென்னை, 

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜனநாயகத்தின் குரல்வளை

அ.தி.மு.க. ஆட்சியில் ஊழல் மூலம் கொள்ளையடித்த பணத்தை வாரி இறைத்து 2016 தமிழக சட்டமன்ற தேர்தலையே லஞ்சம் கொடுத்து விலைக்கு வாங்கிய அதிர்ச்சி தகவல் களை ஆங்கில இதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. ஜனநாயகத்தின் குரல்வளையை முறித்துள்ள இந்த சதித்திட்டத்தை அ.தி.மு.க.வின் மின்துறை அமைச்சராக இருந்த நத்தம் விஸ்வநாதன், வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்தியலிங்கம், இப்போது துணை முதல்-அமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணி அமைத்து நடத்தியிருக்கிறார்கள்.

தி.மு.க.விடமிருந்து வெற்றியை 1 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தட்டிபறிக்க, தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு 650 கோடி ரூபாய்க்கும் மேலான ஊழல் பணத்தை எஸ்.ஆர்.எஸ். மைனிங் என்ற கம்பெனி மூலமே வினியோகம் செய்துள்ளதற்கான அசைக்க முடியாத ஆதாரங்கள் வருமான வரித்துறையிடம் கிடைத்துள்ளது.

இந்த பணம் அனைத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் தாராளமாக வினியோகம் செய்யப்பட்டு, சுதந்திரமான, நேர்மையான தேர்தல் அடியோடு படுகுழிக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் உள்ள வாக்காளர்களில் 70 சதவீதம் பேருக்கு பணம் கொடுத்த ஆதாரம் வருமான வரித்துறையிடம் பிடிபட்டுள்ளது.

வெளிவராத மர்மம்

இது தொடர்பான விவரங்கள் அனைத்தையும் வருமான வரித்துறை புலனாய்வுத்துறை டைரக்டர் ஜெனரலுக்கு 9.5.2017 அன்றே அத்துறையின் முதன்மை இயக்குனர் அனுப்பி வைத்துள்ளார். அதுமட்டுமல்ல இந்த ஆதாரங்களையும், தகவல்களையும் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த முதன்மை இயக்குனரின் கடிதத்தின் மீது எடுத்த நடவடிக்கை என்ன?. 650 கோடி ரூபாய்க்கும் மேலான ஆதாரங்கள் குறித்து தேர்தல் ஆணையம் எடுத்த நடவடிக்கை என்ன? என்பதெல்லாம் இதுவரை வெளியில் வராத மர்மங்களாகவே உள்ளன.

வெள்ளை அறிக்கை

இது மட்டுமல்ல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம், கரூர் அன்புநாதன், நத்தம் விஸ்வநாதன், ஓ.பன்னீர்செல்வம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உறவினர்கள், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததார்கள் என்று அ.தி.மு.க.வினர் மீது நடத்திய அத்தனை வருமான வரித்துறை ரெய்டுகளையும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு தன் கையில் வைத்துக்கொண்டு அ.தி.மு.க.வை மிரட்டி இப்போது தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியும் வைத்துள்ளது.

2016 சட்டசபை தேர்தலை கோடிகளைக் கொடுத்து வாங்க தேர்தல் ஆணையம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் டி.ஜி.பி. ஆகிய அத்தனை பேரும் உடந்தையாக இருந்து ஜனநாயகத்தை படுகொலை செய்யும் சதித்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். ஆகவே, வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில் அனுப்பப்பட்ட தகவல்கள் எங்கே? அதன்மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் தடுத்து வைத்திருக்கும் சக்தி எது? என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையமும், வருமான வரித்துறையை தன் பொறுப்பில் வைத்திருக்கும் மத்திய அரசும் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

மேலும் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் கிரிமினல் குற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். இவர்கள் மீது வேட்புமனுவில் காட்டாத பணத்தை வைத்திருந்தார்கள் என்று கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1 More update

Next Story