அதிமுகவுக்கு தேவையான எண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமா?


அதிமுகவுக்கு தேவையான எண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமா?
x
தினத்தந்தி 23 May 2019 8:41 AM GMT (Updated: 23 May 2019 8:41 AM GMT)

சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேவையான எண்ணிக்கை கிடைக்காவிட்டால் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

புதுடெல்லி

தமிழக சட்டசபையில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அ.தி.மு.க.விற்கு சபாநாயகருடன் சேர்த்து 114; தி.மு.க.விற்கு 88; அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரசுக்கு எட்டு, முஸ்லிம் லீக்கிற்கு ஒன்று, ஒரு சுயேட்சை என 212 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். 22 தொகுதிகள் காலியாக இருந்தன. இந்த 22 தொகுதிகளுக்கு, இரண்டு கட்டமாக இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. 

வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, திமுக 12 தொகுதிகளிலும், மற்றும் அதிமுக 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்ட அனைத்து நிறுவனங்களும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு  சராசரியாக முந்நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் எனக் கூறியுள்ளன. இதனால், தமக்கே மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் நம்பியுள்ளன. இதனால், எந்த  தேர்தலிலும் இல்லாத வகையில் இந்தமுறை தன் கூட்டணிக் கட்சிகளை டெல்லிக்கு அழைத்து பாஜக விருந்து அளித்தது.

அதில் கலந்துகொள்ள வந்த தமிழகக் கட்சிகளுடன் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான கே.பழனிச்சாமி மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் டெல்லி வந்திருந்தனர். அப்போது முதல்வர் பழனிச்சாமி டெல்லியின் தமிழ்நாடு இல்லத்திலும், துணை முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் விருந்து நடைபெற்ற அசோகா ஓட்டலிலும் தங்கி இருந்தனர். இவர்கள், விருந்துக்கு இடையே பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடியுடன் ஆட்சி கலைப்பு பற்றிய  திட்டத்தை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பாஜகவின் முக்கிய தேசிய  நிர்வாகிகள் வட்டாரம் கூறுகையில், ‘அதிமுக மெஜாரிட்டி இழக்கும் நிலை ஏற்பட்டால் ஆட்சியை கலைத்து மீண்டும் தேர்தலை சந்திக்க அக்கட்சி தலைமை திட்டம் வகுத்துள்ளது. அதில், மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அதே கூட்டணி களம் இறங்கும். இதில் பாஜகவிற்கும் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர். அதிமுக அரசின் பதவிக்காலம் 2021-ம் ஆண்டு மே  மாதத்தோடு நிறைவடைகிறது.

Next Story