ஆடவர் ஆக்கி தேசிய சாம்பியன்ஷிப்; இறுதி போட்டிக்கு முன்னேறிய தமிழக அணி
மத்திய பிரதேசத்தில் நடந்து வரும் 12வது ஆடவர் ஆக்கி தேசிய சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தமிழக அணி முன்னேறியுள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் 2022ம் ஆண்டிற்கான 12வது ஆடவர் ஆக்கி தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், முதலில் நடந்த அரையிறுதி போட்டி ஒன்றில் அரியானா மற்றும் மராட்டிய அணிகள் விளையாடின.
இதில், 5-2 என்ற புள்ளி கணக்கில் அரியானா வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதேபோன்று மற்றொரு அரையிறுதி போட்டியில், தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் மோதின. இந்த போட்டியில் தமிழகத்தின் ஜோஷுவா பெனடிக்ட் வெஸ்லி (44வது நிமிடம்), சுந்தரபாண்டி (50வது நிமிடம்) மற்றும் சரவண குமார் (54வது நிமிடம்) கோல்கள் அடித்து அணி வெற்றி பெற உதவினர்.
கர்நாடக அணி தரப்பில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால், தமிழக அணி எளிதில் வெற்றியை பதிவு செய்தது. இறுதி போட்டி அரியானா மற்றும் தமிழக அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ளது.
இதேபோன்று, 3வது மற்றும் 4வது இடத்திற்கான போட்டியில் மராட்டியம் மற்றும் கர்நாடக அணிகள் இன்று விளையாடுகின்றன.
Related Tags :
Next Story