"இந்தியில் பேசும் போது எனக்கு நடுக்கம் ஏற்படும்" - நிர்மலா சீதாராமன்


இந்தியில் பேசும் போது எனக்கு நடுக்கம் ஏற்படும் - நிர்மலா சீதாராமன்
x

இந்தியில் பேசும் போது தனக்கு ஏன் நடுக்கம் ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தை நிர்மலா சீதாராமன் கூறினார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் நடைபெற்ற பத்திரிக்கை நிகழ்ச்சியில் ஒன்றில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமனை பேசுவதற்காக அழைத்த போது, அவர் இந்தியில் பேச இருப்பதாக அறிவித்தனர்.

இதையடுத்து மேடையில் பேசத் தொடங்கிய நிர்மலா சீதாராமன், மேடைகளில் இந்தியில் பேசும் போது தனக்கு நடுக்கம் ஏற்படும் என்று கூறியதோடு, தனக்கு ஏன் அந்த நடுக்கம் ஏற்படுகிறது என்பதற்கான காரணத்தையும் கூறினார்.

தான் தமிழ்நாட்டில் பிறந்தவர் என்றும், தமிழ்நாட்டிலேயே கல்லூரி படிப்பை பயின்றதாகவும் தெரிவித்த அவர், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது தமிழகத்தில் இந்திக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடந்து கொண்டிருந்ததாக தெரிவித்தார்.

அந்த சமயங்களில் இந்தி அல்லது சமஸ்கிருதத்தை முதன்மை மொழியாக தேர்வு செய்து படிக்கும் மாணவர்களுக்கு, அவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்களாக இருந்தாலும், மாநில அரசின் ஊக்கத் தொகை கிடைக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் வளர்ந்த பிறகு ஒரு புதிய மொழியை கற்றுக்கொள்வது சற்று சிரமம் என்று அவர் தெரிவித்தார். தனது கணவரின் தாய்மொழியான தெலுங்கை தன்னால் எளிதாக கற்றுக்கொள்ள முடிந்தது என்றும், அதே சமயம் இந்தியை கற்றுக்கொள்வதில் சிரமம் இருந்ததாகவும், ஒருவேளை அது தனது கடந்த கால அனுபவங்கள் காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

தான் மிகுந்த தயக்கத்துடனேயே இந்தி மொழியில் பேசுவதால், தன்னால் சரளமாக இந்தியில் பேச முடிவதில்லை என்று அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 35 நிமிடங்கள் இந்தியில் பேசிய நிர்மலா சீதாராமன், பா.ஜ.க.வைச் சேர்ந்த வாஜ்பாய், நரேந்திர மோடி ஆகியோரின் ஆட்சிகளில் இந்தியாவில் உள்கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை சிறந்த முறையில் மேம்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


Next Story