"5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி..." - மத்திய அரசை விமர்சித்த பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி


5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி... - மத்திய அரசை விமர்சித்த பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி
x

80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கி வரும் மத்திய அரசை பாராட்ட வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்து துபே கூறியிருந்தார்.

புதுடெல்லி,

பா.ஜ.க. எம்.பி. வருண் காந்தி, தனது சொந்த கட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை அவ்வபோது பதிவு செய்து வருகிறார். இந்தியாவில் இலவச கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அண்மையில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் விவாதம் நடத்தக் கோரி, பா.ஜ.க. எம்.பி. சுஷில் மோடி நோட்டீஸ் வழங்கியிருந்தார்.

அதனை விமர்சிக்கும் விதமாக வருண் காந்தி எம்.பி. தனது டுவிட்டர் பதிவில், "இலவசங்களை ஒழிப்பது குறித்து கேள்வி எழுப்புவதற்கு முன், எம்.பி.க்களுக்கு கிடைக்கும் ஓய்வூதியம் உள்ளிட்ட சலுகைகளை ரத்து செய்துவிட்டு ஏன் விவாதத்தை தொடங்க கூடாது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனிடையே நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின் போது, பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்து துபே, இந்தியாவில் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கி வரும் மத்திய அரசை பாராட்ட வேண்டும் என்று கூறினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் வருண் காந்தி எம்.பி. தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடன்கள் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய நித்துறை இணை மந்திரி பகவத் கே.காரத் தாக்கல் செய்த பட்டியலை இணைத்துள்ளார்.

மேலும் அவர் தனது பதிவில், "5 கிலோ ரேஷன் கொடுத்ததற்கு மக்கள் நன்றி சொல்ல வேண்டும் என நாடாளுமன்றம் ஆசைப்படுகிறது. அதே நாடாளுமன்றம் 5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி வரையிலான ஊழல் பண விலங்குகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகச் சொல்கிறது.

இதில் மெஹுல் சோக்ஸி மற்றும் ரிஷி அகர்வால் பெயர்கள் முதலிடத்தில் உள்ளன. அரசு கருவூலத்தில் முதல் உரிமை யாருக்கு உள்ளது?" என்று பதிவிட்டுள்ளார்.



Next Story