ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்ததில் 7 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்


ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்ததில் 7 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 30 Dec 2016 8:09 AM GMT (Updated: 30 Dec 2016 8:09 AM GMT)

நேற்றிரவு கடும் பனிப் பொழிவும் இருளும் இருந்ததால் மீட்புப் பணியை உடனடியாக தொடங்க முடியவில்லை. இன்று அதிகாலை 6 மணிக்குத்தான் மீட்புப் பணி தொடங்கியது.

ராஞ்சி, 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கம் இடிந்து விபத்து நேரிட்டதில் 7 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டத்தில் உள்ள பகரியா போடாய் எனுமிடத்தில் பெரிய நிலக்கரி சுரங்கம் உள்ளது. ராஞ்சியில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்த சுரங்கத்துக்குள் இருந்து நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணிகளை மகாலட்சுமி நிறுவனம் செய்து வருகிறது.

நேற்றிரவு தொழிலாளர்கள் ஷிப்ட் மாற்றத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிலக்கரி சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. சுரங்கத்துக்குள் நிலக்கரி ஏற்றிக்கொண்டிருந்த சுமார் 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அதில் சிக்கிக்கொண்டன. 40-50 தொழிலாளர்கள் அப்போது நிலக்கரி சுரங்கத்துக்குள் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்டனர்.

நேற்றிரவு கடும் பனிப் பொழிவும் இருளும் இருந்ததால் மீட்புப் பணியை உடனடியாக தொடங்க முடியவில்லை. இன்று அதிகாலை 6 மணிக்குத்தான் மீட்புப் பணி தொடங்கியது. சம்பவ இடத்துக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மீட்கப் படும் தொழிலாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல ஹெலிகாப்டர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மருத்துவ குழுவும் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளது. தொழிலாளர்களை எப்படியாவது உயிரோடு மீட்க முயற்சி நடந்து வருகிறது. 

இதுவரையில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். இதனால் மற்றவர்கள் கதி என்ன என்பதில் கேள்விக் குறி எழுந்துள்ளது, தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Next Story