இன்னும் 7 ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் திட்டம்


இன்னும் 7 ஆண்டுகளில் விண்வெளிக்கு மனிதன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம் திட்டம்
x
தினத்தந்தி 4 Jan 2017 11:45 PM GMT (Updated: 4 Jan 2017 9:47 PM GMT)

இன்னும் 7 ஆண்டுகளில், விண்வெளிக்கு சோதனை ரீதியில் மனிதனை அனுப்புவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

திருப்பதி,

இன்னும் 7 ஆண்டுகளில், விண்வெளிக்கு சோதனை ரீதியில் மனிதனை அனுப்புவதற்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இஸ்ரோ சாதனை

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ‘இஸ்ரோ’ என்னும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகம், மிக முக்கிய பங்கு வகித்து வருகிறது. இந்தியாவில் செயற்கைகோள்களை தயாரித்து வெளிநாடுகளில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் ஏவுகிற நிலையை இது மாற்றி சாதனை படைத்து உள்ளது.

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படுகிற செயற்கைகோள்களை மட்டுமின்றி, வெளிநாடுகளில் தயாரிக்கப்படுகிற செயற்கைகோள்களையும் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்டுகள் மூலம் விண்வெளியில் இஸ்ரோ செலுத்தி சாதனை படைத்து வருகிறது.

விண்வெளிக்கு மனிதன்

அடுத்த கட்டமாக இன்னும் 7 ஆண்டுகளில் அதாவது, 2024-ம் ஆண்டில் விண்வெளிக்கு ராக்கெட்டில் மனிதனை அனுப்பவும் இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறுகிறபோது அது விண்வெளித்துறையில் மகத்தான சாதனையாக விளங்கும். இது குறித்த தகவல் ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெறுகிற இந்திய அறிவியல் மாநாட்டில் வெளியாகி உள்ளது.

இந்த மாநாட்டில் விண்வெளி தொழில்நுட்பம் பற்றிய அமர்வு நேற்று நடைபெற்றது. இதில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் எல்.பி.எஸ்.சி. என்ற திரவ புரபல்சன் அமைப்புகள் மையத்தின் இயக்குனர் சோம்நாத் பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

2024-ம் ஆண்டு, செமி கிரையோனிக் என்ஜினை கொண்டு இயங்கும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் மூலம் சோதனை ரீதியில் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். ஆரம்ப கட்ட விண்கலங்கள், சோதனை ரீதியிலானவை. அவை ஆட்களை சுமந்து செல்லாது.

மேல்நிலையில், 10 டன் எடையுள்ள விண்கலத்தை குறைந்த புவி சுற்றுவட்டப் பாதையில் வீச முடியும்.

இருப்பினும், இஸ்ரோ உடனடியாக மேற்கொள்ளக்கூடிய திட்டம், பி.எஸ்.எல்.வி., சி37 ராக்கெட்டு மூலம் விண்வெளியில் 103 செயற்கை கோள்களை செலுத்துவதுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

100 குறும் செயற்கை கோள்கள்

பின்னர் சோம்நாத் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசும்போது, “வெளிநாடுகளின் 100 குறும் செயற்கைகோள்களுடன், கார்ட்டோசாட் 2-டி, ஐ.என்.எஸ். 1 ஏ மற்றும் ஐ.என்.எஸ். 1பி செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி., சி 37 ராக்கெட் சுமந்து செல்லும். இவற்றின் பேலோடு எடை 1382 கிலோ ஆகும். பி.எஸ்.எல்.வி.யைப் பொறுத்தமட்டில் நடப்பு நிதி ஆண்டில் 8 ஏவுதலுக்கு திட்டமிட்டுள்ளோம். கடந்த ஆண்டு, இந்த எண்ணிக்கை 6 ஆக இருந்தது. படிப்படியாக பல கட்டங்களில் இந்த எண்ணிக்கையை 20 என்ற அளவுக்கு உயர்த்துவதற்கு முடிவு செய்துள்ளோம்” என குறிப்பிட்டார். 

Next Story