‘உதய்’ மின் திட்டத்தில் தமிழகம் இணைகிறது டெல்லியில் 9–ந்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம்


‘உதய்’ மின் திட்டத்தில் தமிழகம் இணைகிறது டெல்லியில் 9–ந்தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம்
x
தினத்தந்தி 6 Jan 2017 10:26 PM GMT (Updated: 6 Jan 2017 10:26 PM GMT)

‘உதய்’ மின் திட்டத்தில் தமிழகமும் இணைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 9–ந்தேதி டெல்லியில் கையெழுத்து ஆகிறது.

புதுடெல்லி,

‘உதய்’ மின் திட்டத்தில் தமிழகமும் இணைகிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் 9–ந்தேதி டெல்லியில் கையெழுத்து ஆகிறது.

‘உதய்’ மின் திட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் மாநிலங்களின் மின் வினியோக திறனை மேம்படுத்தவும், மின் உற்பத்தி விலை மற்றும் மின் வினியோக அமைப்புகளின் வட்டி சுமையை குறைக்கவும், மின்வினியோக அமைப்புகளில் நிதி ஒழுக்கம் மற்றும் மேலாண்மையை நிலைநாட்டவும் ‘உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ்’ (‘உதய்’) திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த திட்டத்தின் கீழ் 2015 செப்டம்பர் வரை மாநில மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீத அளவை மாநில அரசுகள் ஏற்க வேண்டும், மின் கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும், மின் இழப்பை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று உள்ளன.

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இத்திட்டத்தில் இதுவரை நாடு முழுவதும் 20 மாநிலங்கள் இணைந்து இருக்கின்றன. தற்போது 21–வது மாநிலமாக தமிழகம் இதில் இணைகிறது. மத்திய மின்சாரத்துறை மந்திரி பியூஷ் கோயல் முன்னிலையில் தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி டெல்லியில் 9–ந்தேதி ‘உதய்’ மின் திட்டத்தில் இணைய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடுகிறார்.

மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு இடையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

இந்த தகவலை மத்திய மின்சாரத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளது.


Next Story