நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 2,400 ஏ.டி.எம்.கள் நிறுவப்படும் ரெயில்வே அமைச்சகம் தகவல்


நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 2,400 ஏ.டி.எம்.கள் நிறுவப்படும் ரெயில்வே அமைச்சகம் தகவல்
x
தினத்தந்தி 8 Jan 2017 10:30 PM GMT (Updated: 8 Jan 2017 9:24 PM GMT)

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 2,400 ஏ.டி.எம்.களை நிறுவ ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது. கட்டணம் இல்லா வருவாய் ரெயில்வே இலாகாவின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான நிதியில் பெரும

புதுடெல்லி,

நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 2,400 ஏ.டி.எம்.களை நிறுவ ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.

கட்டணம் இல்லா வருவாய்

ரெயில்வே இலாகாவின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்காக சுமார் ரூ.1 லட்சம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது. ஆனால் இதற்கான நிதியில் பெரும்பகுதியை ரெயில்வே தனது சொந்த முயற்சியில் திரட்டிக்கொள்ள வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் கறாராக கூறிவிட்டது.

மேலும் இந்த ஆண்டு முதல் ரெயில்வேக்கு தனி பட்ஜெட் கிடையாது என்பதால் பொது பட்ஜெட்டில் இவ்வளவு பெரிய தொகையை நிதி அமைச்சகம் ஒதுக்குவதும் சாத்தியமில்லை என்று கருதப்படுகிறது.

இதையடுத்து, பயணிகளிடம் கட்டணம் பெறாமல் பல்வேறு வழிகளில் நிதியை திரட்ட ரெயில்வே அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. இதற்காக கட்டணம் இல்லா வருவாய் என்னும் கொள்கையை மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு அடுத்த வாரம் தொடங்கிவைக்கிறார்.

2,400 ஏ.டி.எம்.கள்

அதன்படி நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 2,400 ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்படும். (தற்போது முக்கிய ரெயில் நிலையங்களில் மட்டுமே ஏ.டி.எம். எந்திரங்கள் உள்ளன) இந்த ஏ.டி.எம்.கள் நடைமேடையின் எல்லைப் பகுதி அல்லது ரெயில் நிலையத்தில் அதிக அளவில் இடவசதி இருக்கும் இடங்களில் நிறுவப்படும்.

இதேபோல் ரெயில் தண்டவாளங்களையொட்டி பயன்படுத்தப்படாத பகுதி, ரெயில்வே மேம்பாலங்கள், ஆளில்லாத கேட்டுகள் ஆகிய பகுதிகளில் விளம்பர பலகைகளை கூடுதலாக வைக்கவும் ரெயில்வே இலாகா முடிவு செய்து உள்ளது.

இதுபற்றி ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

ஒருங்கிணைந்த ஒளிபரப்பு

தற்போது ரெயில்வே இலாகாவின் மொத்த வருமானத்தில் கட்டணம் இல்லாத வழியில் கிடைக்கும் வருவாய் வெறும் 5 சதவீதம்தான். இதை பல்வேறு வழிகளில் பெருக்குவதற்கு ரெயில்வே முடிவு செய்து இருக்கிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அதிக அளவில் ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்படுகிறது.

இதேபோல் பிரமாண்ட எல்.இ.டி. திரைகள் மூலம் ரெயில் நிலைய கட்டிடங்கள், நடைமேடைகள், நடை மேம்பாலங்கள் போன்ற இடங்களில் ஒருங்கிணைந்த ரெயில்வே ஒளிபரப்பு தொடங்கப்படும். இந்த ஒளிபரப்பு பழைய டெல்லி, வாரணாசி, ஜெய்ப்பூர் உள்ளிட்ட 25 நகர ரெயில் நிலையங்களில் முதன் முதலில் தொடங்கிவைக்கப்படும். இதைத்தொடர்ந்து பல முக்கிய ரெயில் நிலையங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ரெயில்களில் விளம்பரத்துக்கு அனுமதி

குறிப்பிட்ட ரெயில்களில் உட்புறமும், வெளியேயும் விளம்பரம் செய்ய அனுமதி வழங்கப்படும். இதேபோல் ரெயில்களில் பிரபல நிறுவனங்களின் மாதிரிகளை பயணிகளுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்து அதில் பயணிகளின் கருத்தும் பெறப்படும். இந்த திட்டம் ராஜ்தானி மற்றும் சதாப்தி ரெயில் சேவைகளில் தொடங்கிவைக்கப்படும். பின்னர் பகுதி வாரியாக இதர ரெயில்களிலும் விரிவுபடுத்தப்படும்.

கட்டணம் இல்லா வருவாய் கொள்கைபடி ஏ.சி. பெட்டிகளின் உள்ளேயும், வெளியேயும் விளம்பரம் செய்வதற்கு அனுமதிக்கப்படும்.

ரெயில் நிலையங்களிலும், ரெயில்களிலும் வானொலி மற்றும் வீடியோ மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படும். இதேபோல் சினிமா, கலை நிகழ்ச்சிகள், கல்வி நிறுவனங்களின் விளம்பரங்களை ஒளிபரப்பவும் அனுமதிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story