மும்முறை தலாக் விவகாரம்; பல்வேறு வழக்குகள் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை "தலாக்" என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது.
புதுடெல்லி,
மும்முறை தலாக் விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நடைபெறுகிறது.
இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இம்முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை "தலாக்" என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது. மூன்று முறை தலாக் செய்யும் முறையை நியாயப்படுத்தும் விதமாக இந்தியாவின் உயர்மட்ட இஸ்லாமிய சட்ட வாரியம் சுப்ரீம் கோர்ட்டு மத சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்றும் சமூக சீர்திருத்தம் என்று தனிப்பட்ட சட்டங்களை மீண்டும் எழுதக்கூடாது என்றும் கூறியது.
மும்முறை தலாக் விவாகரத்து முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.
தேசிய பெண்கள் ஆணையம் தாக்கல் செய்து உள்ள அபிடவிட்டிலும் மும்முறை தலாக்கிற்கு தடைவிதிக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மும்முறை தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பெண்கள் தாக்கல் செய்த வழக்கானது சுப்ரீம் கோர்ட்டு முன்னதாக உள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தில் உள்ள மும்முறை தலாக் மற்றும் பலதார மணத்தின் சட்டப்பூர்வத் தன்மை குறித்தான வழக்குகள் தொடர்பாக இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளது. கடந்த வருடம் இதுபோன்ற வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, மும்முறை தலாக் முறையானது முற்றிலும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றது. இஸ்லாமிய பெண்களின் உரியை மீறுகிறது. எந்தஒரு தனிநபர் சட்ட வாரியமும் அரசியலமைப்பிற்கு மேலானது கிடையாது என்று கூறியது.
Next Story